Saturday, June 28, 2025

GSTPS : ஆறாவது ஆண்டின் நிறைவு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி அலைகள்


பலரும் பங்கெடுக்கவேண்டும். இடம் நன்றாக, சுத்தமாக இருக்கவேண்டும். குறைவான செலவில் இருக்கவேண்டும் என்ற அக்கறையில் நேரில் பார்த்து, பேசி, நாலு இடத்தில் விசாரித்து, புளு பே ரிசார்ட் என நிர்வாகிகள் அறிவித்தார்கள்.

 

இந்தமுறையும் பயணம் செல்கிறோம் என அறிவித்ததும்… கடந்த காலங்களில் சென்ற பயணத்தின் அலைகள் நினைவுகளில் எல்லோருக்கும் உள்ளுக்குள் எழத்துவங்கிவிட்டன. வரிசையாக பயணத்திற்கு தயாரானார்கள்.

 


எல்லோருக்கும் கலந்துகொள்ளவேண்டும் என ஆர்வம் இருந்தாலும், வெளியூர் பயணம், ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த வேலைகள், உடல்நிலை, விடுப்பு கிடைக்காதது என வாழ்க்கையின் சிரமங்கள் எப்பொழுதும் நம்மை சூழலில் உள்ளிழுத்து சுற்றவைத்துக்கொண்டே இருக்கின்றன. 

 

உடல்நலக்குறைவால் கடைசி நேரத்தில் மூவர் வர இயலவில்லை, பெரியப்பா இறந்துவிட்டார் என ஒருவர் வர இயலவில்லை.

 

வங்காளவிரிகுடாவின் கரையோரத்தில் Blue Bay Resort

 

பயணம் செல்லும் நம்மை வாழ்த்தி, இன்றைக்கு வெயில் அடக்கி வாசித்தது. குளு குளு ஏசி பேருந்தும் நம்மை சிரமப்படாமல் கொண்டு சேர்த்தது. பேருந்தில் தந்த இனிப்பும், காரமும் சுவைத்தது.

 


மதிய நேரம். பசித்தது. மரத்தின் நிழலில்… மலரினும் மெல்லிய சப்பாத்தி, சுவையான வெஜ் புலாவ், குருமா, அப்பளம், தயிர் சோறும், மாங்காய் ஊறுகாயும் எல்லோருடைய பசியையும் நன்றாக போக்கின.

 

கடந்து வந்த காலடிச்சுவடுகள்

 


ரிசார்ட்டை அடைந்ததும்… குளிர்பானம் தந்தார்கள். சிறிது நேரத்திலேயே கூட்டத்திற்கான ஏற்பாடை செய்தார்கள். கடந்த ஒரு ஆண்டில் (ஜூலை 2024 துவங்கி ஜூன் 2025 வரை நமது கூட்டங்களைப் பற்றிய தொகுப்பை நிர்வாகிகள் தொகுத்து வழங்கினார்கள். சில விசயங்களை உணர வைக்கிறது. பெரும்பாலும் நமது நிர்வாகிகளும், உறுப்பினர்களுமே உரையாற்றியிருக்கிறார்கள். வெளியில் இருந்தும் பேசும் பேச்சாளர்கள் கணிசமாக குறைந்திருக்கிறார்கள்.

 

நிர்வாகிகளின் முன்முயற்சியில் புதியவர்களுக்கு, ஜிஎஸ்டி வகுப்பை பத்து நாட்கள் பயிற்றுவித்திருக்கிறோம். புதிய பேச்சாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.  எல்லோரும் இல்லாவிடினும், சிலராவது சொசைட்டியினுடான பயணத்தில் ”கற்றதும், பெற்றதும்” என பேசச் சொல்லியிருக்கலாம் என தோன்றியது.

 

பரபரப்பான பட்டிமன்றம்


தலைப்பு : "ITC - GST சட்டத்தில் சாதகமா? பாதகமா?"

தலைவர்: திரு.  S. செந்தமிழ் செல்வன்  அவர்கள்.

சாதகம்

திரு. செண்பகம்

திரு. கைலாஷ்மூர்த்தி

திரு. சந்திரசேகர்

திரு. செந்தில்முத்து

பாதகம்

Dr. வில்லியப்பன்

திரு. முருகன்
திருமதி பொன்மணி

திரு. இராஜீ

பட்டிமன்றம் துவங்கியது. தலைப்பே விவாதப் பொருளாய் மாறி போனதை தலைவர் நினைவூட்டினார்.  இரண்டு அணி பேச்சாளர்களும்  தத்தம் அணிக்கு சட்டம், நடைமுறை, வணிகர்களின் சிரமம் என எல்லா வகையிலுமே வலுச்சேர்த்தார்கள். இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக ஜூரம் வந்ததால், கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாதவர் தொலைபேசி வழியாக தன் வாதங்களை முன்வைத்தார். எல்லோருடைய பேச்சிலும் நிதானம், ஆவேசம், நகைச்சுவை என பல உணர்வுகள் கலந்து கட்டி வெளிவந்தன.

 

பேச்சாளர்களின் வாதங்களுக்கு இடையே பார்வையாளர்கள் கைத்தட்டினார்கள். அரங்கம் அதிர சிரித்தார்கள். உணர்ச்சி வசப்பட்டு வாதங்களை எடுத்து கொடுத்தார்கள். வென்ற ”சாதகம்” அணிக்கும், பங்குகொண்ட ”பாதகம்” அணிக்கும்  நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 

 

வாதங்கள் நினைவில் நன்றாக பதிந்தன. புதிய பேச்சாளர்களை கண்டடைந்திருக்கிறோம். பட்டிமன்றம் ஒரு அருமையான வடிவம். நிகழ்வின் வெற்றியில், இனி இடையிடையே பட்டிமன்றம் நேரடிக்கூட்டங்களில் அரங்கேறும் என உணரமுடிந்தது.

 

புதிதாய் இணைந்தவர்களுக்கு சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டன.

 


இரண்டு மணி நேரத்தில் இரண்டு நிகழ்வுகளும் முடிவடைந்தன. சுவையான வடையும், இதமான காபியும் இன்னும் உற்சாகம் தந்தன.

 

குளமும், குதூகலமும்

 

குளத்தில் குதூகலத்தோடு குதித்தார்கள். மணிக்கணக்கில் பந்து விளையாடினார்கள். நீச்சலடித்தார்கள். குளோரின் மெல்லிதாய் மூக்கில் ஏறினாலும், கண்ணை கசக்க வைத்தாலும், மணிக்கணக்கில் ஊறிக்கிடந்தார்கள். அடுத்தநாள் கிளம்பும் பொழுது, ”குளத்தில் குளித்துவிட்டு போகலாமே!” ஒருவர் ஏக்கமாய் சொன்னார். கடந்த ஆண்டில் குளித்த ஏகாட்டூர் ரிசார்ட் நன்னீர் குளம் நினைவில் வந்துபோனது.

 

பலரையும் பங்கெடுக்க வைத்து கிரிக்கெட் விளையாடினார்கள். இறகு பந்து விளையாடினார்கள். இப்பொழுது மாதம் இருமுறை கிரிக்கெட் விளையாடலாம் என ஒரு உறுப்பினர் ஆலோசனை தந்துள்ளார்.

 




சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா, பிரியாணி, குழம்பு, சாலட், இனிப்பு, ஐஸ்கீரிம் என வரிசைக் கட்டி இருந்தன. இரவில் எழுந்த கடல் அலைகளின் ஓசையோடு, கதைத்தப்படியே எல்லோரும் மெல்ல உணவுண்டார்கள்.

 

ஒன்றை அபிநயம் காண்பித்து, கடைசி வரை அணியினர் சரியாக செய்யவேண்டும் என விளையாட்டு.  அபிநயத்தில் பலரும் ஆச்சர்யப்படுத்தினார்கள். சிறப்பாக நடித்த, வருத்தத்தில் இருந்த என பலருக்கும் பரிசுகள் தந்து ஆற்றுப்படுத்தினார்கள்.

 

எல்லோருக்கும் அருமையான மரத்தால் ஆன நல்ல சுத்தமான கூடுகள்.  கடலோரத்தில் குளுகுளுவென இரவு தூக்கம்.

 

சில விசயங்கள் எப்பொழுதும் அலுக்காது. குழந்தையின் புன்சிரிப்பு, அசைந்து வரும் யானை வரிசையில் கடலும் இடம்பெறும். அதிகாலை கடல் அனுபவம் இன்னும் சிறப்பு.

 

5.46க்கு சூரிய உதயம் காண, பலரும் வந்து கடற்கரையில் காத்திருந்தோம். சிலர் அலைகளோடு விளையாடினார்கள். கதை பேசினார்கள். சிலர் நடந்தார்கள். இந்த காலை அனுபவம் இன்னும் பல நாட்கள் நினைவில் நிற்கும்.

 

மீண்டும் குளத்து குளியல். இட்லி, தோசை, பொங்கல், வடை, பிரெட், ஜாம், பட்டர் என வரிசைக்கட்டியது.  பொங்கலும், வடையும் போட்டியில் வெற்றிபெற்றன.

 


நினைவுப் பரிசான GSTPS பெயர் பொதிந்த கோடைக்காலத்துக்கு ஏற்ற அழகான நீர் குடுவை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

பிரியப்போகிற வருத்தம் கொஞ்சம் எல்லோரிடத்திலும் இருந்தது. விடைபெற்று கிளம்பினோம். அடுத்த ஆண்டு இன்னும் பலரோடு கலகலக்க வருவோம் என மனதில் சொல்லிக்கொண்டோம்.

 

பயணம் எப்பொழுதும் மனிதர்களைப் புதுப்பிக்க செய்யும். நிறைய கற்றுத்தரும். இணக்கம் உண்டாக்கும்.

 

இந்த பயணமும் கடந்த பயணத்தை விட நேரம் அதிகம். மகிழ்ச்சியும் அதிகம். இனி இன்னும் உற்சாகமாய், ஏற்காடோ, ஏதேனும் ஊரோ இரண்டுநாள் பயணப்படலாம் என நம்மை பழக செய்திருக்கிறது.  உறுப்பினர்கள் இன்னும் நெருக்கமாகியிருக்கிறார்கள். 

 

சமகாலம் தினசரி வாழ்க்கை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என பலவும் நம்மை ஒரு வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியாக மாற்றியிருக்கிறது. மனிதர்கள் மற்றவர்களோடு நன்றாக உரையாடவேண்டும். குடும்பத்தினரோடு நேரம் (Quanity time) மட்டுமல்ல! ஆரோக்கியமாக (Quality Time) செலவழிக்கவேண்டும் என வழிக்காட்டுகிறது நவீன மருத்துவம்.

 

தொடர்ந்து கற்றுக்கொள்வோம்! இணக்கமாவோம்! வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளில் உயர்ந்து செல்வோம்!

 

ஒரு பயணம் என்பது பல்வேறு திட்டமிடல்களை கொண்டது. உழைப்பு கோரக்கூடியது. இல்லையெனில் பயணம் நல்ல நினைவுகளை உருவாக்குவது போல கொஞ்சம் கசப்பையும் சேர்த்து தந்துவிடும்.  எல்லாவித ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

 

எல்லோருக்கும் பயிற்றுவித்து, சிறப்பாக வழிகாட்டுதல்கள் தந்து, எங்களை இயக்கும் சிறந்த ஆசானான செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி.


- GSTPS


பயணத்தில் நிர்வாகிகளும், உறுப்பினர்களும்


பேருந்து  நிறுத்தம் எழும்பூர்


1. Mrs. P. Ponmani + Master Joshva

2. Mr. S. Rajiv 

3. Mr. S. Vicky

4. Mr. S. Sathick Basha

5. Mr. R.Thulasiraman (A)

6. Mr. V.Vijayakumar

7. Mr. KS Shanmugam (A)

8. Mr. PR.Srinievasan

9. Mr. Jayakumar

10. Mr. K. Moorthy


நிறுத்தம் : கோயம்பேடு


11. Mr. S.Chandramouli, CA

12. Mr. R Muniasamy

13. Mr. A R ChandraSekar (A)

14. Mr. Senthil Muthu

15. Mr. E. Murugan

16. Mr. Dr. Villiyappan

17. Mrs. Selvarani +  Miss. Yamini

18. Mrs. Subha + Miss. Vani

19. Mr. Srinivasan

20. Mr. Mageshkumar (A)

21. Mr. S. Anandhan (A)


நேரடியாக ரிசார்ட் வருபவர்கள்


1. Mr. N. Sugumaran

2. Mr. Selvavinayagam

3. Mr. PM Mohanraj, CA

4. Mr. G.Gubendiran


நிர்வாகிகள்


திரு. செந்தமிழ்ச்செல்வன், தலைவர் 

திரு. பாலாஜி அருணாச்சலம், துணைத்தலைவர்

திரு. செல்வராஜ், பொருளாளர்.

திரு. பாலாஜி, செயலர்

திரு. செண்பகம், இணைச்செயலர்

திரு. சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்

திரு. சுந்தர்ராம் கல்யாண், செயற்குழு உறுப்பினர்

திரு. முத்தரசன், செயற்குழு உறுப்பினர்


GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Wednesday, June 11, 2025

GSTPS "HSN summary of B2B & B2C on GSTR1"- S. Balaji, Secretary, GSTPS


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (14/06/2025) அன்று காலை 10.30 மணியளவில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "HSN summary of B2B & B2C on GSTR1"


பேச்சாளர் :   திரு. S. பாலாஜி, 
                           செயலர்,
                           GSTPS


Meeting ID  :  6625536356

Password    :   14062025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Tuesday, June 10, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) - புதிய மாற்றங்கள் - அத்தியாயம் 17


நிறுவனம் புதிய பணியாளரை இ.பி.எப் தளத்தில் பதிவு செய்ய நிறுவன முதலாளியின் DSC  பதிவு செய்வது இப்பொழுது முன்நிபந்தனை

 

தொழிலாளர்களின் அடிப்படை விசயங்களான ஆதார், வங்கி விவரம், பான் கார்டு (KYC) குறித்த விசயங்களை சரிப்பார்த்து, டிஜிட்டல் கீ கொண்டு ஒப்புதல் தரவேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.  ஆகையால் ஒரு டிஜிட்டல் கீ மிகவும் அவசியம்.  அதை பல நிறுவனங்கள் பதிவு செய்து வைத்துக்கொண்டு, உரிய நேரத்தில் தொழிலாளர்களின் ஆவணங்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது அவசியம்.   அப்படி ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதால், பல தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து, இ.பி.எப். நிதியை, ஓய்வூதியத்தைப் பெற முடியாமல் தடுமாறுகிறார்கள். நிறைய தாமதம் ஆகிறது. ஆகையால், நிர்வாகத்தை பதிவு செய்யவைக்கவேண்டும் என்பதால்,  ஒரு தொழிலாளியை புதிதாக தளத்தில் பதிவு செய்யவேண்டுமென்றால், இப்பொழுது டிஜிட்டல் கீ பதிவு செய்வதை முன்நிபந்தனையாக மாற்றிவிட்டது.  கடந்த மாதம் இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் சிலரும் கேட்டதால் அதை விளக்கமாக பார்க்கலாம்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் (Digital Signature Certificate)

 

நிர்வாகத்தின் பொறுப்பாளராக (Authorised Signatory)  யாரை பிஎப்பை பதிவு செய்யும் பொழுது கொடுத்தோமோ, அவருடைய பான் எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், அவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து டிஜிட்டல் கீ பதிந்து (Register) தருகிறவர்களிடம் கொடுத்தால், உடனே பதிவு செய்து அடுத்த நாளே தந்துவிடுகிறார்கள்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழை பி.எப். தளத்தில் பதிவு செய்வது எப்படி?

 

டிஜிட்டல் கீயை பி.எப். தளத்தில் பதிவதற்கு.. நமது கணிப்பொறியில் சில அம்சங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கிகொள்ளவேண்டும்.  பையர்பாக்ஸ் (Firefox) குறிப்பிட்ட வெர்சன், ஜாவா (Java updated version), பி.எப் தளத்தில் DSC Signer Utility என ஒரு மென்பொருள் தருகிறார்கள். இதையெல்லாம் நமது கணிப்பொறியில் சரியாக (Installation) பொருத்திக்கொள்ளவேண்டும்.  இந்த வேலையை எப்படி செய்வது என்பதை இந்த சுட்டியில் உள்ள காணொளியைப் பாருங்கள்.  அவர் சொன்னதை கற்றுக்கொண்டு செய்யலாம். 

https://www.youtube.com/watch?v=4Pd_nbXkBOI

 

கூடுதலாக, டிஜிட்டல் கீ சம்பந்தமாக ஏதேனும் தொழில்நுட்ப உதவி வேண்டுமென்றால், தொழில்நுட்ப உதவி செய்வதாக பி.எப். தளத்தில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். 

Screen Reader Access – Technical Help – 18001 18005 (Toll free) Timing : 9.15 AM to 5.45 PM

 

பிறகு பி.எப் தளத்தில் உள்ளே நுழைந்ததும், Establishment என்ற தலைப்பின் கீழ் வரும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் DSC/ESign என்ற இடத்தை கிளிக் செய்யவேண்டும்.   அந்த பகுதியில் நாம் நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயரை, டிஜிட்டல் சான்றிதழில் கொடுக்கப்பட்ட பெயரை சரியாக எழுதவேண்டும். அவர் என்ன பொறுப்பு Proprietor/Partner/Managing Director  என்பதை குறிப்பிடவேண்டும். மொபைல் எண் கொடுக்கவேண்டும்.   அதற்கு பிறகு Register DSC என்பதை கிளிக் செய்து, மேலே சொன்னதன் அடிப்படையில் டிஜிட்டல் கீ கொண்டு பதிந்துவிடலாம்.

 

அதற்கு பிறகு, Request letter என்ற பிடிஎப் பைல் ஒன்று பி.எப் தளமே உருவாக்கித்தரும்.  அதை தரவிறக்கி, (Download) கொள்ளவேண்டும்.   அந்த கடிதத்தை நிறுவனத்தின் லெட்டர் பேடில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.  அந்த கடிதத்தில், நிறுவனத்தின் பொறுப்பாளர் தனிநபர் என்றால், அவரே மூன்று முறை (Specimen Signature) கையெழுத்திட்டு, கீழே நிறுவனத்தின் முத்திரையை (For seal) வைத்து, அதிலும் கையெழுத்திட்டு, நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பி.எப் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.  கூட்டாண்மை (Partnership firm) நிறுவனமாக இருந்தால், பொறுப்பானவர் மூன்று முறை கையெப்பமிட்டு, முத்திரை வைத்து, இன்னொரு பங்குதாரர் (Partner) கையெழுத்திடவேண்டும்.

 

எங்கிருந்து அந்த தரவிறக்கி கொண்டோமோ, அங்கேயே தாக்கல் (upload) செய்யவேண்டும். நிறுவனத்தின் கடிதத்தை பெற்றுக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை சரிப்பார்த்து நிருவனத்திற்கென இருக்கும் பி.எப் அலுவலகம் ஒப்புதல் (Approve) தந்ததும் பி.எப் தளத்தில் அந்த குறிப்பிட்ட (DSC - Signature status) பகுதியில் ”Active” எனகாட்டும். அப்படி காட்டினால், முறையாக பதிவு செய்துவிட்டோம் என புரிந்துகொள்ளலாம்.  கடிதம் கிடைக்கப்பெற்று அவர்கள் ஒப்புதல் கொடுக்க அதிகப்பட்சம் ஏழுநாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை நிறுவனம் அனுப்பிய கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவர்கள் ஒப்புதல் கொடுக்கமாட்டார்கள். அதை நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தமாட்டார்கள்.   நாமாக புரிந்துகொண்டு அந்த பிழை என்னவென்று கண்டுபிடித்து,  சரி செய்து மீண்டும் தாக்கல் செய்த பிறகே ஒப்புதல் தருவார்கள். 

 

பி.எப். நிதியில் இருந்து முன்பணம் (Advance) பெறும் வசதி  - புதிய விதிகள்

 


கொரானா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, பி.எப் கணக்கில் கடன் வாங்குவது என்பது திருமணம், மருத்துவ செலவுகள், வீடு கட்டுதல், வீட்டை புதுப்பித்தல், கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக என வரையறுக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதற்குரிய சான்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் பொழுது தான் பி.எப். கடன் வழங்கிக்கொண்டிருந்தது.


கொரானா பெருந்தொற்றால்  2020ல் அரசு ஊரடங்கு அறிவித்த பொழுது,  பல தொழிற்சாலைகள் முடங்கின. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.   நெருக்கடியான வாழ்நிலையை கணக்கில் கொண்டு,  எந்த ஆவணமும் இல்லாமல், தொழிலாளர்கள் அவர்கள் செலுத்திய பணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.  அவர்களுடைய பி.எப். நிதி இருப்பில் அந்த பணம் கழித்துக்கொள்ளப்படும்.  அதைத் திருப்பி செலுத்தவேண்டியதில்லை எனவும் அறிவித்தது.

 

கொரானா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையும் கொடூரமாக மக்களை தாக்கியது.  ஆகையால், முன்பணம் வாங்கும் காலத்தையும் நீட்டித்து அறிவித்தது.  நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டபடியால், இப்பொழுது ஆவணங்களின்றி முன்பணம் தருவதை நிறுத்துவதாக அறிவித்தது..


இப்பொழுது முன்பணம் பெறுவது குறித்த புதிய நிபந்தனைகளையும், வழிமுறைகளையும் பி.எப். அறிவித்துள்ளது.


பி.எப். உறுப்பினருக்கான தளத்தில்  Online service என்ற பகுதியில் கிளிக் செய்தால், முதலில் வருவது Claim என காண்பிக்கும்.  அதில் முன்பணம் (Advance)  என்ற (Form 31)   விண்ணப்பத்தை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.    அதில் நாம் வேலை செய்த நிறுவனங்களை வரிசையாக காட்டும்.  பொதுவாக முந்தைய கணக்குகளை இப்பொழுதோ அல்லது கடைசியாக வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிக்கொள்வது நல்லது.   இல்லையெனில், மூன்று நிறுவனங்களில் வேலை செய்திருந்தால், மூன்று கணக்குகளுமே தனித்தனியாக நிற்கும். அதனால் நாம் நினைக்கும் முன்பணம் பெறுவதற்கான தகுதிகளை  அடைய முடியாது போகும்.

 

பிறகு என்ன காரணங்களுக்காக முன்பணம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.  அதில் வரிசையாக இப்படி காண்பிக்கும்.

 

இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை.  (Non receipt of wages > 2 months)

இயற்கை பேரிடர் (Natural Calamites)

உடல்நலக்குறைவு (Illness)

மின்சாரம் துண்டிப்பு (Power Cut)

மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வாங்குதல் (Purchase of Handicap Equipment)

வீடு வாங்குவது/கட்டுவது/ மராமத்து செய்வது

 

இப்படி இன்னும் சில அம்சங்களும் இருக்கின்றன.    இதில் ஒவ்வொரு தலைப்பிற்கும் உரிய நிபந்தனைகள் இருக்கின்றன. சில ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.  அதே போல எவ்வளவு நிதி கொடுக்கப்படும் என்பதற்கும், பட்டியலில் உள்ள அம்சங்களுக்கு தகுந்தவாறு நிபந்தனை இருக்கிறது.  பி.எப். பணம் மொத்தத்தையும் எடுத்துவிட முடியாது.


உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை என்றால், நாம் கடைசியாக வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியேறியதை (Exit) பதிந்திருக்கவேண்டும்.


சம்பந்தப்பட்ட  பணியாளருக்கோ, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ உடல்நலக்குறைவு என்றால்… நிறுனத்தின் பொறுப்பாளரும் , மருத்துவரும் சான்றிதழ் சி வழங்கவேண்டும்.


வீடு வாங்குவது என்றால்…ஒரு பிரிவு விதி A  சொல்வது என்னவென்றால் வீட்டை யார் தொழிலாளிக்கு விற்பவர் என்கிற விவரத்தை கொடுக்கவேண்டும். பணம் நமக்கு வராமல், சம்பந்தப்பட்டவருக்கே சென்றுவிடும். வீடு வாங்குவது குறித்து A துவங்கி F வரைக்கும் நிறைய வழிகாட்டுதல்கள் தந்திருக்கிறார்கள். அதை முழுவதும் படித்த பிறகு விண்ணப்பியுங்கள்.

ஆகையால் விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கவனமாக படித்து முன்பணத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும். இல்லையெனில், விண்ணப்பத்தை பி.எப். ஏற்காது. திருப்பி (Reject) அனுப்பிவிடும். கவனமாய் இருங்கள்.


பி.எப் முன்பணம் குறித்த விதிகளும், வழிகாட்டுதல்களும் (INSTRUCTIONS AND GUIDELINES FOR THE ADVANCES TO BE CLAIMED THROUGH FORM 31) இணையத்தில் மூன்று பக்கங்களில் PDF பைலாக எளிதாக கிடைக்கின்றன.  இல்லையெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அனுப்பி உதவுகிறேன்.


பி.எப். நிதியை பெறுவதில் தாமதமும், சரி செய்வதற்கான மாற்றங்களும்!


கடந்த மாதம் ஒரு தொழிலாளி “அழைப்பதற்கு ஒரு பெயரும்,  சான்றிதழில் இன்னொரு பெயரும் பல ஆண்டுகளாக  எனக்கு இருக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன்பு  நான் பணிபுரிந்த நிறுவனத்தில் அழைப்பதற்கான பெயரை பி.எப். பில் பதிந்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகள் பணம் செலுத்திவிட்டார்கள். இப்பொழுது பணி ஓய்வும் பெற்றுவிட்டேன். பி.எப் பணத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது .. என்னுடைய சான்றிதழ் பெயர் முரண்படுகிறது என பணம் தர மறுக்கிறார்கள்” என்றார்.  விசாரித்த பொழுது, அதற்கு நிர்வனத்தின் தரப்பில் இருந்து ஒரு விளக்க கடிதமும், ஒப்புதல் கடிதமும் கேட்கிறார்கள் என்றார்.  “உங்களை தனிப்பட்ட முறையில் பி.எப். அலுவலகத்திற்கு தெரியாது.   பணம் சம்பந்தப்பட்ட விசயம் என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  ஆகையால் கேட்கும் ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுங்கள். நிதியை விடுவித்துவிடுவார்கள்” என தெரிவித்தேன்.


பிப்ரவரி 2024ல், 69 வயதான ஓய்வூதியதாரர் ஒருவர் ஒன்பது ஆண்டுகளாக தனது வருங்கால வைப்பு நிதி (PF) சலுகைகளை திரும்பப் பெற முடியாததால் கொச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி (PF) அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். பலமுறை சென்றும்,  கேட்கிற ஆவணங்களையும் சமர்ப்பித்த போதிலும், 'தொழில்நுட்ப' சிக்கல்கள் காரணமாக அவரது நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.


முழுக்க தாள்களில் இருந்து பி.எப் நடைமுறை கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் வடிவத்திற்கு  அனைத்தையும் மாற்றிக்கொண்டிருக்கிறது. சந்தாதாரர்களும் அதைப் புரிந்துகொண்டு மாற முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இந்த மாற்றத்தினை புரிந்துகொள்ள முடியாத, அவர்கள் கேட்கும் ஆவணங்களை நடைமுறையில் தரமுடியாத தொழிலாளர்கள்  புலம்பிக்கொண்டே பி.எப் அலுவலகத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். பி.எப். அலுவலகத்தில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சி. 

இந்தியா போன்ற படிப்பறிவில் ஏற்றத்தாழ்வுள்ள நாட்டில்,  இந்த மாற்றம் இன்னும் வேகமாக நடைபெறவேண்டும் என்பது அவசியம் என்பதை தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கையாக முன்வைப்போம். கூடுதலாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், முழுக்க விதிகளைக் காரணம் காட்டி செலுத்திய நிதியை மறுக்கவும் கூடாது. மனிதாபிமானத்துடனும் அணுகவேண்டும்.


இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

Thursday, June 5, 2025

GSTPS : Declaration Forms ITC-01, ITC-02, ITC-03 & ITC-04 Under GST - S. Selvaraj, Treasurer, GSTPS

 


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (07/06/2025) அன்று காலை 10.30 மணியளவில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "Declaration Forms ITC-01, ITC-02, ITC-03 & ITC-04 Under GST"


பேச்சாளர் :   திரு. S. செல்வராஜ், 
                           பொருளாளர்,
                           GSTPS


Meeting ID  :  6625536356

Password    :   07062025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS



தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety