Wednesday, January 15, 2025

GSTPS : செந்தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகம் திரளாக கலந்து கொள்ள, கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!

தலைவர் செந்தமிழ்ச்செல்வன்  எழுதிய புத்தகம்  உறுப்பினர்களும், வரி ஆலோசகர்களும், நண்பர்களும், சொந்தங்களும் என திரளாக கலந்து கொள்ள, கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!

 


ஜி.எஸ்.டி.ஆர் 1 கடைசி தேதி, பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், ஊருக்கு செல்வது என புறநிலையில் நெருக்கடி இருந்தாலும், அரங்கு நிறைந்த கூட்டத்துடன் துவங்கியது அருமையாக இருந்தது.

 


SS சாரின் பேத்திகள் ஆராதனாவும், அமோகாவும் தமிழ்த்தாய் பாட கூட்டம் இனிதே துவங்கியது.

 

முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அவர்கள் பேசும் பொழுது…

 

“செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் எங்கள் ஊர்க்காரர். சொந்தக்காரர்.  ஜி.எஸ்.டி குறித்த புத்தகத்தை  எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் எழுதியிருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்துகொள்கிறேன்”  என துவங்கி, ஜி.எஸ்.டி வரி இங்கு அமுலாவதற்கு முன்பு என்ன நிலைமை, சட்ட சபையில் ஒரு மணி நேரம் உரையாற்றியது, பிறகு அமைச்சரானது,  அதற்கு பிறகு கவுன்சிலில் கலந்துகொண்டு, பல்வேறு கலாச்சார வேறுபாடு கொண்ட மாநிலங்களை கொண்டவர்களும் உறுப்பினர்களாக இருப்பதால், கலவையான அனுபவங்களை பெற்றது என்பதையும் சிறப்பாக பேசி, உடலையும் பேணிக்காப்பதில் கவனமாக இருங்கள் என அக்கறையோடு கேட்டுக்கொண்டார். கதைப்புத்தகங்களை எழுதுவதற்கு இங்கு நிறைய இருக்கிறார்கள். துறை சார்ந்து எழுதுவதற்கு தான் இங்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். இப்படி ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து ஆற்றலுடையவர்களாக மாற்றும் பணியை மேற்கொண்டிருக்கிற இந்த GSTPS சொசைட்டிக்கும் வாழ்த்துகள் என வாழ்த்துப்  பேசி நூலையும் வெளியிட்டார். அவருக்கு சொசைட்டி சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 


தணிக்கையாளரும், முனைவருமான கோபாலகிருஷ்ணராஜூ அவர்கள் ஜி.எஸ்.டி குறித்து பல கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார்.  ஜி.எஸ்.டி வரி குறித்து  மிகுந்த கவனம் வேண்டும். அத்தனை நுணுக்கமாக கற்கவேண்டியதாக இருக்கிறது.  இந்தப் புத்தகம் அதற்கு உதவி செய்யும் என செந்தமிழ்ச் செல்வன் அவர்களை வாழ்த்தி விடைபெற்றார். அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

கம்பெனி செக்கரட்ரியும், வழக்கறிஞருமான சீனிவாசன் அவர்கள் “25 ஆண்டுகளாக சாருடன் பழகி வருகிறேன். அவரைப் போலவே என்னையும் எழுத தூண்டியவர்.  எழுதுவது அத்தனை எளிதில்லை.  எழுத துவங்கும் பொழுது தான் அந்த சிரமங்கள் நமக்கு புரியும். துவக்கத்தில் எழுத தடுமாறிய நான், இப்பொழுது எனது எழுத்திற்காக விருது பெற்றிருக்கிறேன்.  அவரை வாழ்த்துகிறேன்” என விடைபெற்றார். அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 


உறுப்பினர் முனியசாமி பேசும் பொழுது….

 

“200 பக்கங்களில் பிழைத்திருத்தம் செய்தேன் என்பதற்காக கோவை பெருமாள் சாரோடு என்னையும் விமர்சன உரை என்ற பெயரில் அழைப்பிதழில் இணைத்திருக்கிறார்கள்.  உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்த வந்திருக்கிறேன் என சொல்லலாம்.

 

ஒரு புத்தகம் உருவாக்குவத்தில் பல படி நிலைகள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி சட்ட அறிவு, ஆங்கில அறிவு, தமிழ் அறிவு, பல ஆண்டுகளின் நடைமுறை அனுபவம், புத்தகத்தை கொண்டு வருவதற்கான பொருளாதாரம்,  வளர்ந்து வரும் ஆலோசகர்கள் மீதான அக்கறை, வணிகர்களுக்கு சட்டம் புரிய வேண்டும் என்ற அடிப்படையில் தான் எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் தந்திருக்கிறார்.  இன்னும் முக்கியமானது இன்றைய தேதி வரைக்கும் அப்டேட் செய்திருக்கிறார். பதிப்பகத்தார் தட்டச்சு செய்து தரும் பிரதிகளை பல பகல் இரவுகள் தனது துணைவியாரின் உதவியுடன் பிழைத்திருத்தங்கள் பார்த்திருக்கிறார்.

 

இத்தனை உழைப்புக்கு பிறகு புத்தகங்களை விற்கும் சிரமத்தையும் அவருக்கு தந்துவிடக்கூடாது. நமது உறுப்பினர்களும், சக வரி ஆலோசகர்களும் முயற்சிகள் செய்தால், எளிதாய் உரியவர்களுக்கு கொண்டு சேர்த்துவிடலாம். 

 


இதெல்லாம் மத்திய, மாநில அரசுகள்  செந்தமிழ்ச்செல்வன் போன்ற மூத்த வரி ஆலோசகர்களிடம்  சில லட்சங்களை கொடுத்து இந்த வேலையை செய்து வணிகர்களிடம் கொண்டு சேர்திருக்கவேண்டும்.  அரசுகள் செய்யவேண்டியதை தனிநபராக தனது சக வரி ஆலோசகர்களின் துணையுடன் கொண்டு வருகிறார் என்பது தான் முக்கியமானது.” என பேசி முடித்தார். அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

இந்த புத்தக அறிமுக நிகழ்வை இத்தனைச் சிறப்பாக ஏற்பாடு செய்த GSTPS நிர்வாகிகளுக்கும்,  புத்தகத்தை வெளியிட்ட திரு. பாண்டியராஜன் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், கலந்துகொண்ட  தன்னுடன் படித்த நண்பர்கள், வரி ஆலோசகர்கள், அரசு அதிகாரிகள் சொந்தங்கள் எல்லோருக்கும் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் நன்றி தெரிவித்து முடித்தார்.

 


கோவையைச் சேர்ந்த வரி ஆலோசகர் நஜ்முதீன் அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பிவைத்திருந்தார். அரங்கில் வாசிக்கப்பட்டது. வரி ஆலோசகர் பெருமாள் அவர்கள்  பெருமுயற்சி செய்தும் பொங்கல் விடுமுறை போக்குவரத்து நெருக்கடியால் சென்னைக்கு வர இயலவில்லை.   தன்னுடைய உரையை காணொளியாக அனுப்பி வைத்திருந்தார். புத்தகத்திற்குள் சென்று பல முக்கிய செய்திகளை சுட்டிக்காட்டியிருந்தார். நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

 


சக வரி ஆலோசகர்கள் சால்வைகள் போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.  பூங்கொத்து, பரிசு பொருட்கள் என வாழ்த்திக் கொடுத்தார்கள்.

 


புத்தகத்தை வாங்கியவர்கள் மூன்று, நான்கு என வாங்கினார்கள்.  செந்தமிழ்ச்செல்வன் அவர்களிடம் புத்தகங்களில் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.  

 


உள்ளே நுழையும் பொழுதே பிஸ்கட்டும், அருமையான காபியும் வழங்கப்பட்டது.   செல்லும் பொழுது, அனைவருக்கும்  SS சாரின் மகள் சார்பில் அழகான பேனா ஸ்டாண்டு ஒன்று வழங்கப்பட்டது.  சொசைட்டி சார்பில் சுவையான மைசூர் பாகும், மிக்சரும் வழங்கப்பட்டது. 

 

நிகழ்வு இனிதே நிறைவேறியது.  இந்த நிகழ்வு என்பதே பலருடைய கூட்டு உழைப்பில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகையால் அனைவருக்குமே நன்றி.

 



மொத்த நிகழ்வையும் தெளிவான தமிழில் தொகுத்து வழங்கியவர் தமிழ் ஆசிரியர் சுந்தர் ராம். சில தொலைக்காட்சி  நிகழ்வுகளில், காணொலி/காணொளிகளிலும் குரல் கொடுப்பவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

 

நன்றி.

 

-        GSTPS

 

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப்https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக்https://www.facebook.com/gstprofessionalssociety

-          


No comments:

Post a Comment