Tuesday, February 11, 2025

ஜனவரி 2025ல் இணை உறுதிமொழிப் பத்திரத்தில் (Joint Declaration) செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?



வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 13

 

ஜனவரி 2025ல் இணை உறுதிமொழிப் பத்திரத்தில் (Joint Declaration) செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

 

பி.எப். திட்டத்தில்  ஆதாரின் வருகைக்கு முன்பு ஒரு பணியாளர் குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தளத்தில் பதிவு செய்யும் பொழுது,  பணியாளர்கள் வாய்மொழியாக தெரிவிக்கும் விவரங்களை பதிவு செய்வது வழக்கமாய் இருந்தது.  தகவல்களை சரிப்பார்ப்பதற்கு உரிய ஆவணங்களை கேட்கும் பொழுது, அதற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து  பல பணியாளர்கள் தருவதில்லை அல்லது தாமதப்படுத்துவார்கள்.

 

ஆகையால், பெயர், அப்பா/கணவர் பெயர், பிறந்த தேதி என பதிவு செய்ததில் நிறைய குழப்பங்கள்  இருந்தன. பிறந்த வருடத்தில் ஏழு வருடங்கள் வித்தியாசம் இருந்த பணியாளரை அனுபவத்தில் அறிவேன்.   இணையும் பொழுது, நாம் கொடுக்கும் தனிபட்ட விவரங்களை ஏற்றுக்கொள்ளும் பி.எப். தளம்  பி.எப் பணத்திற்காக விண்ணப்பிக்கும் பொழுது எளிதாக தந்துவிடுவதில்லை.  சம்பந்தப்பட்ட பணியாளருடைய விவரங்களில் உள்ள எல்லா பிழைகளையும் சரி செய்து வந்த பிறகே பணத்தை வங்கிக்கு அனுப்பிவைக்கும்.   அந்த தவறுகளை சரி செய்வதற்கு பல நாட்கள் அலைந்தே பணியாளர் நொந்தே போவார்.  கேட்கும் பொழுதே தராத தனது அலட்சியம் தான் காரணம் என உணராமல் புலம்பிக்கொண்டே அலைவார்கள்.

 

ஆதார் வந்த பிறகு குழப்பங்கள் பெருமளவில் குறைந்தன. ஆதார் இல்லாமல் பி.எப். தளத்தில் பணியாளரை இணைக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ஆதாரில் உள்ள பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி என எல்லா விவரங்களையும் பி.எப் தளம் ஏற்றுக்கொண்டது. ஆகையால் அடிப்படை விவரங்களை சரியாக பதிய முடிந்தது.

 

பி.எப். பணத்தைப் பெறுவதற்கு, ஆதார் விவரங்கள் மட்டும் சரியானவையாக இருந்தால் போதாது.   பணியாளரின் பான் கார்டு, வங்கி கணக்கில் உள்ள விவரங்கள் எல்லாம் ஆதாரில் உள்ள விவரங்களோடு சரியாக ஒத்துப்போகவேண்டும். 

 

முன்பு பணியாளரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் என குறைவான அம்சங்களை மட்டுமே திருத்துவதற்கு பி.எப் தளத்தில் வசதி இருந்து வந்தது.

 

ஆனால் நடைமுறையில் பணியாளர்களின் தனிப்பட்ட விவரங்களையும்,  நிறுவனத்தில் இணைந்த தேதி, விலகிய தேதி என பல அம்சங்களில் உள்ள பிழைகளை சரி செய்வதற்கு தளத்தில் வசதி இல்லாமல் இருந்தது.  இதற்காகவே இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration form)  ஒன்றை பி.எப் வைத்திருந்தது.   

 

அந்த விண்ணப்பத்தில்  எது சரியான விவரங்கள், எந்த விவரங்கள் தளத்தில் பிழையாக இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு, வேலை செய்யும் நிறுவனத்தின் பொறுப்பாளர் கையெழுத்திட்டு, நிறுவனத்தின் சீல் வைத்து, பணியாளரும் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட பி.எப். அலுவலகத்தில் ஒப்படைத்தால், பிழைகளை சரி செய்யும் வழக்கமிருந்தது.

 

உறுப்பினருக்கான பி.எப். தளத்திலேயே இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration)

 

பணியாளர்களின்  தனிப்பட்ட விவரங்கள், மற்ற அம்சங்களையும் திருத்துவதற்கு பி.எப் அலுவலகத்துக்கு நேரில் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் எப்பொழுதும், பி.எப் அலுவலகங்களில் நிரம்பி வழிந்தார்கள்.

 

இதற்கும் சில மாதங்களுக்கு முன்பு பிஎப் நிறுவனம் ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்து, உறுப்பினர்கள் பயன்படுத்தும் பிஎப் தளத்திலேயே இணை உறுதிமொழிப் பத்திரத்தை வலையேற்றும் வசதியை ஏற்படுத்தி தந்தது. பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம்,  அப்பா/கணவர் பெயர், பாலினம், படிப்பு தகுதி, திருமணம் ஆனவரா, இல்லையா என பல அம்சங்களையும் திருத்துவதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இந்த வசதியை பி.எப் உறுப்பினருக்கான தளத்தில் நிர்வகி (Manage) என்ற தலைப்பின் கீழ் முதல் அம்சமாக இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration)  ஒன்றை இணைத்திருந்தார்கள்.  அதைக் கிளிக் செய்தால், நாம் வேலை செய்த நிறுவனத்தின் பெயர்/பெயர்கள் தெரியும்.  ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், ஒரு கணக்கும், சில நிறுவனங்களில் வேலை செய்தால், சில கணக்குகளும் தளம் காட்டும்.  எந்த கணக்கிற்கு நாம் திருத்தம் செய்யும் தேவையிருக்கிறதோ, அந்த கணக்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

 

பிறகு, தனிப்பட்ட விவரங்களுக்கான பகுதியில் (Personal Details) மூன்று அம்சங்களைக் காட்டும். ஒன்று தேவையான மாற்றம் செய்யும் பகுதி (Update Details),  அடுத்தது, எந்த மாற்றம் செய்ய கோருகிறோமோ, அதற்கான ஆவணங்களை வலையேற்றும் (Upload documents)  பகுதி,  மூன்றாவது நாம் விவரங்களை சரிப்பார்த்து, சமர்ப்பிக்கும் பகுதி (Preview/Submit Application) இருக்கும்.

 

இரண்டாவது பகுதியில், நமது வேலை செய்த விவரங்களான (Update Service Details), வேலையில் இணைந்த தேதி, விலகிய தேதி, வேலையில் இருந்து விலகியதற்கான காரணம், அதே போல ஓய்வூதிய கணக்கில் உள்ள விவரங்களையும் தளம் காட்டும்.  அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கும் நாம் விண்ணப்பிக்கலாம்.

 

இதில் நாம் செய்கிற திருத்தத்துக்கு உரிய ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டும்.  என்னென்ன திருத்தம் செய்யமுடியும், எத்தனைமுறை திருத்தமுடியும், ஒவ்வொரு திருத்தத்திற்கும்  என்ன ஆவணம், ஆவணங்கள் வலையேற்ற வேண்டும் என்பதற்கு, பி.எப். விளக்கமான கையேடு (SOP – Standard of Procedures) ஒன்றை 23/08/2023 அன்றும், அதற்கு பிறகு இன்னும் மேம்படுத்தி,  26/03/2024 அன்றும்  வெளியிட்டு இருக்கிறது.  இணையத்தில் தேடினால் எளிதாக கிடைக்கிறது.

 

பணியாளர்கள் மேற்கண்ட விவரங்களை சமர்ப்பித்த பிறகு, நிறுவனத்தின் பார்வைக்கு செல்லும். சம்பந்தப்பட்ட நிறுவனம் அவற்றை உரிய ஆவணங்களுடன் வலையேற்றப்பட்டிருக்கிறதா என்பதை சரிப்பார்த்து, ஒப்புதல் வழங்குகிறது.  பிறகு, அந்த விண்ணப்பம் பி.எப் நிறுவனத்திற்கு செல்கிறது.  அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பிஎப். அலுவலர் சரிப்பார்த்து ஒப்புதல் கொடுத்ததும்,  தொழிலாளர் கோரிய மாற்றம் தளத்தில் மாற்றம் செய்யப்படும்.

 

ஜனவரி 2025ல் இணை உறுதிப் பத்திரத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம்

 

பணியாளர்களின் பெயர் மற்ற இதர மாற்றங்களை செய்வதற்காக பணியாளர்களிடம் அது தொடர்பான இரண்டு, மூன்று ஆவணங்கள் கேட்கும் பொழுது, அந்த ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத பொழுது குழப்பங்களும், பணியாளர்கள் பி.எப். அலுவலகத்திற்கு நிறைய அலைவதும் நேரிட்டது. ஆகையால், இதை எளிமைப்படுத்தும் விதமாக, ஜனவரி 16ந் தேதியன்று  (Joint Declaration SOP Version) 3.0 என  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

அதில் மேலே சொன்னப்படி, 01/10/2017 தேதியில் இருந்து ஆதாரோடு பதிவு செய்யப்பட்ட UAN வைத்திருக்கிற பணியாளர்களே அவர்களுக்கான பி.எப். தளத்தில் போய் மாற்றம் செய்துகொள்ளமுடியும் என வழிகாட்டியுள்ளது.

 

01/10/2017க்கு முன்பு  தளத்தில் பதிவான பணியாளர்கள் அவர்கள் தளத்தில் திருத்தங்களை செய்த பிறகு, அவர் வேலை செய்த நிறுவனத்தின் நிர்வாகியின் கவனத்துக்கு செல்லும்.  அதற்கு அந்த நிர்வாகி ஒப்புதல் (Approve) கொடுக்கவேண்டும்.

 

பணியாளர் இறந்துவிட்டால், உரிமை கோருகிற வாரிசுதாரர் இந்த இணை உறுதிமொழிப் பத்திரத்தை அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிறுவனத்தின் நிர்வாகியிடம் கையெழுத்து வாங்கி (Physical) சமர்ப்பிக்கவேண்டும்.  நிறுவனம் மூடப்பட்டு விட்டால், வங்கி மேலாளர், அரசு அனுமதி பெற்ற அதிகாரிகளிடம் (Gazetted Officer) கையெழுத்து வாங்கி சமர்ப்பிக்கவேண்டும்.  சில முக்கியமான மாற்றங்களுக்கு பி.எப் அலுவர்களும் சரிப்பார்த்த பிறகே நடைமுறைக்கு வரும்.

 

என்னென்ன மாற்றங்களுக்கு என்னென்ன ஆவணங்களை வலையேற்ற (Upload) வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் விரிவாக தரப்பட்டுள்ளது. இணையத்தில் தேடினால் எளிதாக கிடைக்கும்.

 

பி.எப் பதிவு எண் வைத்திருக்கும் ஒரு நிறுவனம் , எப்பொழுது தனக்கு பதிவு எண் (Registration No.) வேண்டாம் என(surrender) திரும்ப  ஒப்படைக்கமுடியும்  அதற்கு முறையாக செய்யவேண்டியது என்ன?

 

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய பொழுது, சிலர் இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள்.  ஒரு நிறுவனம் துவங்கி எப்பொழுது 20 ஊழியர்கள் வேலை செய்கிறார்களோ, அவர்கள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்பது விதி.  அதற்கு குறைவான ஊழியர்கள் இருக்கும் பட்சத்தில்,  அந்த நிறுவனத்தின் முதலாளியும்/நிர்வாகியும், அதில் வேலை செய்கிற பெரும்பாலான ஊழியர்களும் இணைவதாக அதற்கென தரப்பட்டுள்ள ஒப்புதல் கடித்ததில் (consent Letter) கையெழுத்திட்டு தந்தால், தானாக இணையும் (voluntary Coverage) பி.எப். திட்டத்தில் இணையமுடியும். இதை ஏற்கனவே விரிவாக விளக்கியிருக்கிறோம்.

 

ஆனால் ஒரு நிறுவனத்தின் முதலாளி இறந்து போனாலோ, நொடித்துப் போனாலோ, எந்த பணியாளரும் இல்லாத நிலையிலோ,  இனி நிறுவனத்தை இயக்கவே முடியாது என பல காரணங்களினால் என்ன செய்வது என என பலருக்கும் தெரிவதில்லை., ஆகையால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

 

நிறுவனம்  பெயரளவில் இருக்கிறது. எந்த பணியாளரும் இல்லை எனும் பொழுது,   சிலர் மாதாந்திர ரிட்டனை தாக்கல் செய்ய தேவையில்லை என தவறாக புரிந்துகொள்கிறார்கள்.   பணியாளர்கள் இல்லை எனும் செய்தி பி.எப்புக்கு எப்படி தெரியும்?  ஆறு மாதம் ரிட்டன் ஏதும் தாக்கல் செய்யவில்லை என்றால், கடைசியாய் எத்தனை பணியாளர்களுக்கு  நாம் செலுத்தினோமோ, அதை கணக்கிட்டு பணம் செலுத்த சொல்லியோ அல்லது ஏன் தாக்கல் செய்யவில்லை என விளக்கம் கேட்டோ பி.எப் நோட்டிஸ் அனுப்பிவைக்கும். பிறகு அந்த நோட்டிசுக்கு பதில் சொல்வதற்கு பலமுறை அலையவேண்டியதாகிவிடும்.

 

ஆகையால், பணியாளர் யாரும் இல்லாத நிலையில், பி.எப்க்கு குறைந்தப்பட்ச பராமரிப்பு தொகையாக (Administrative Charges)  ரூ. 75 – கணக்கு எண் : 2ல் செலுத்தவேண்டும். நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டும் வரை நாம் செலுத்தவேண்டும்.

 

நிறுவனம் நிரந்தரமாக மூடுகிற பொழுது, பி.எப் எண்ணை ஒப்படைப்பதற்கு முறையாக என்னென்ன செய்யவேண்டும்?

 

அ.  நிறுவனத்திற்கான ஜி.எஸ்.டி சான்றிதழை திரும்ப ஒப்படைத்தற்கான சான்றிதழை இணைக்கவேண்டும்.

ஆ. நிறுவனத்திற்கான வங்கிக் கணக்கை  மூடவேண்டும். அதற்கான ஒரு சான்றிதழ் பெற்று இணைக்கவேண்டும்.

இ) கடந்த இரண்டு வருடங்களுக்கான நிறுவனத்திற்கென வருமான வரி சான்றிதழை இணைக்கவேண்டும்.  (இதன் மூலம் விற்பனை செய்திருக்கிறார்களா என்பதை சரிப்பார்த்துக்கொள்வார்கள்.)

ஈ) நிறுவனத்தில் வேலை செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக சம்பளம், இதர விசயங்கள் கொடுக்கப்படுள்ளனவா என்பதற்கான ஆதாரம்.    இணைக்கவேண்டும்.

உ) பி.எப் தளத்தில் தொழிலாளர்கள் என யாரும் இருந்தால், அவர்கள் நிறுவனத்தில் இருந்து விலகிய (Exit) தேதியை குறிப்பிடவேண்டும்.

ஊ)  தொழிற்சாலையாக இருந்தால், அதன் முக்கிய உற்பத்தி எந்திரங்கள் விற்றதற்கான பில்களை இணைக்கவேண்டும்.

எ) நிறுவனத்திற்காக வாடகை ஒப்பந்தம் இருந்தால், அதனை முறிவு செய்ததற்கான (Dissolution Deed) ஒப்பந்தம் இணைக்கவேண்டும்.

ஏ) நிறுவனம் தனிநபர், கூட்டு நிறுவனம். பிரைவேட் லிமிடெட் என  தன்மை மாறினால், அதற்கென பொருத்தமான ஆவணங்களையும் இணைக்கவேண்டும்.

 

இதையெல்லாம் இணைத்து பி.எப்.க்கு முறையாக கடிதம் எழுதி தெரியப்படுத்தவேண்டும்.   கடந்த காலங்களில் நாம் ஏதும் பணம் கட்ட வேண்டிய பாக்கி இருக்கிறதா? தாமதமாக பணம் செலுத்தியதற்கு ஏதும் பாக்கி இருக்கிறதா என சரிப்பார்த்து,  அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து சான்றிதழ் பெறும் வரைக்கும் நாம் தொடர்பில் இருக்கவேண்டும்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721


இந்தக் கட்டுரை ”தொழில் உலகம்” பிப்ரவரி 2025 இதழில்  வெளிவந்தது.

No comments:

Post a Comment