Saturday, June 13, 2026

50+ வயதில் கணக்கு மேலாளர் (Accounts Manager) பதவியில் இருந்து வரி ஆலோசகராக மாறுவது – ஒரு புதிய இன்னிங்ஸ்!

 


வருடத்திற்கு ஒருவராவது அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருப்பவர் வரி ஆலோசராக மாறுவதில் என்னென்ன சவால்கள் இருக்கின்றன? மாறலாம் என இருக்கிறேன் என ஆலோசனை கேட்கிறார்கள்.

 

இது சம்பந்தமாக அசை போடும் பொழுது…. என் அனுபவத்தில் தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன்.  *நமது சொசைட்டியில் நிறைய வரி ஆலோசகர்கள் இருக்கிறீர்கள். உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்தால் நலம்.* 

 

***

 

பலர் நினைப்பார்கள். "இந்த வயதில் புதியதாக என்ன தொடங்க முடியும்?" ஆனால் உண்மையில் பார்த்தால், 50+ வயதில் Tax Consultant ஆக மாறுபவர்களுக்கு சில தனிப்பட்ட பலங்கள் இருக்கின்றன.

 

இளம் வயதில் கிடைக்காத அனுபவம். நிறுவனங்களின் நடைமுறை செயல்பாடுகள் பற்றிய புரிதல். பணியாளர்கள், வங்கிகள், தணிக்கையாளர்கள், வரித்துறை,  வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் வேலை செய்த அனுபவம். இவை அனைத்தும் ஒரு பெரிய அடித்தளம். அதன் மீது சில புதிய திறன்களை சேர்த்துக்கொண்டால், ஒரு சிறந்த வரி ஆலோசகராக உருவாக முடியும்.

 

முழுநேர வேலையிலிருந்து படிப்படியாக மாறலாம்

 

பல ஆண்டுகளாக நிலையான வேலை பார்த்தவர்கள், உடனடியாக வேலையை விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. மாறாக,  பகுதி நேர வேலை  ஆலோசகர் பொறுப்பு,  நெகிழ்வான வேலை நேரம் போன்ற வழிகளைத் தேர்வு செய்யலாம். இதனால் வருமான நிலைத்தன்மையும் இருக்கும். அதே நேரத்தில் புதிய துறையிலும் அனுபவம் சேர்க்க முடியும்.

 

தினமும் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம்


கணக்கியல் துறையில் அனுபவம் ஏற்கனவே இருக்கிறது. இப்போது அதனுடன், ஜி.எஸ்.டி சட்டம்,  வருமானவரிச் சட்டம், அறிவிப்புகள் (Notifications ),  சுற்றறிக்கைகள் (Circulars), வழக்கு தீர்ப்புகள் (Case Laws) போன்றவற்றை தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை இணைத்துக்கொள்ளலாம்.

 

தினமும் ஒரு மணி நேரம் படித்தால்கூட, ஒரு வருடத்தில் ஏற்படும் முன்னேற்றம் ஆச்சரியப்பட வைக்கும்.

 

நோட்டிசுக்கு பதில் (Reply Drafting) திறனை வளர்த்துக்கொள்ளலாம்

 

ஒரு வரி ஆலோசகரின் முக்கியமான திறன்களில் ஒன்று, சரியான பதிலை சரியான முறையில் எழுதுவது. நோட்டிசுககளை படிப்பது, பழைய கடிதங்களை ஆராய்வது, சட்டப்பிரிவுகளை இணைத்து விளக்குவது, போன்றவற்றை தொடர்ந்து பயிற்சி செய்தால் மிகுந்த தன்னம்பிக்கை உருவாகும்.

 

எழுதும் திறன் மிகப்பெரிய பலமாக மாறும்

 

ஒரு நல்ல வரி ஆலோசகர் என்பது சட்டம் தெரிந்தவர் மட்டுமல்ல. சட்டத்தை எளிமையாக விளக்கத் தெரிந்தவரும் ஆவார். அதற்காக, சிறிய கட்டுரைகள்,  சட்ட விளக்கங்கள், குறிப்புகள் , வாடிக்கையாளர் தகவல் செய்திகள் எழுதும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த எழுத்துகளே உங்கள் அடையாளமாக மாறலாம்.

 

நேர ஒழுங்கை (Time Management) தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும்

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது அமைப்பு நம்மை ஒழுங்குபடுத்தும். சொந்தமாக செயல்படும்போது நாம்தான் நம்மை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்காக, தினசரி திட்டம்  வார இலக்குகள்  செய்யவேண்டிய வேலை (Follow-up) பட்டியல், படிப்பு நேரம்  ஆகியவற்றை முறையாக அமைத்துக்கொள்ளலாம்.

 

இந்த ஒரு பழக்கம் மட்டுமே பலரை விட முன்னே கொண்டு செல்லும்.

 

மக்களுடன் தொடர்பு கொள்ளும் வட்டாரத்தை விரிவுபடுத்தலாம்

 

வரி ஆலோசகர் தொழிலில் அறிவு முக்கியம். அதே அளவுக்கு தொடர்புகளும் முக்கியம். அதனால்,  தொழில் சங்கங்கள் , வணிக அமைப்புகள், தொழில்முறை கூட்டங்கள், பயிற்சி நிகழ்ச்சிகள் , ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்கலாம்.

இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

 

தொழில்நுட்பத்தை நண்பனாக மாற்றிக்கொள்ளலாம்

 

இன்றைய காலத்தில்,  செயற்கை நுண்ணறிவு கருவிகள், தேடித் தருகிற கருவிகள் (Research Tools ), சுயமாக வேலை செய்யும் முறை (Automation Systems ) போன்றவை ஒரு ஆலோசகரின் திறனை பல மடங்கு உயர்த்துகின்றன.  பல வருட அனுபவத்துடன் தொழில்நுட்பத்தையும் இணைத்துக்கொண்டால், செயல்திறன் கணிசமாக அதிகரிக்கும்.

 

மிகப்பெரிய பலம்அனுபவம்

 

இளம் வயதில் அறிவு அதிகமாக இருக்கலாம். ஆனால் அனுபவம் காலப்போக்கில்தான் கிடைக்கும். 50+ வயதில் வரி ஆலோசகராக மாறுபவர்களின் மிகப்பெரிய சொத்து, அவர்கள் பார்த்திருக்கும் வாழ்க்கை அனுபவமும், தொழில் அனுபவமும் தான். ஒரு Balance Sheet- மட்டும் அல்ல, ஒரு தொழிலின் பின்னால் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் அவர்கள் புரிந்திருப்பார்கள்.

 

அந்த அனுபவம் பல வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும்.

 

இறுதியாக...

 

50+ வயதில் வரி ஆலோசகராக மாறுவது ஒரு தொழில் மாற்றம் மட்டுமல்ல. பல ஆண்டுகள் சேர்த்துக்கொண்ட அனுபவத்தை, மற்றவர்களுக்கு பயனுள்ள ஆலோசனையாக மாற்றும் ஒரு வாய்ப்பு. படிப்படியாகத் திட்டமிட்டு, தொடர்ந்து கற்றுக்கொண்டு, ஒழுங்கை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால், இந்தப் பயணம் புதிய வருமானத்தையும், புதிய அடையாளத்தையும், புதிய திருப்தியையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.

 

-    இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

 

பின்குறிப்பு  - இந்த கட்டுரையை நேர்மறையில் கவனமாய் எழுதியிருக்கிறேன்.  வரி ஆலோசகர் பக்கமெல்லாம் வராதீர்கள். ஏக பதட்டம். வருமானம் நிலையில்லை.  50க்கு மேல் இதையெல்லாம் தாங்கமுடியாது.  என இன்னொருவரும் சொல்லலாம். அதுவும் மறுப்பதற்கில்லை. அதுவும் அனுபவங்கள் தான்.

Friday, June 12, 2026

GSTPS : எங்களைப் பற்றிய ஒரு சுய அறிமுகம்

 


வணக்கம். எங்களது சொசைட்டி குறித்தும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் ஒரு சிறிய அறிமுகத்தை உங்களுக்கு தருகிறோம்.


2017ல் இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகமான பொழுது தணிக்கையாளர்களும், முதலாளிகளுக்குமான சங்கங்களும், வரி ஆலோசகர்களும், மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள்,. நிறைய சந்தேகங்கள் சூழ்ந்திருந்தன.

 

இந்த இக்கட்டான சமயத்தில் தான் சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிகவரி ஆலோசகராக அனுபவம் வாய்ந்த செந்தமிழ்செல்வன் அவர்களின் முன்னெடுப்பில், இந்த GSTPS சொசைட்டியை அவரைப் போல ஒரே சிந்தனை கொண்டவர்களும் இணைந்து ஜி.எஸ்.டி. புரொபசனல்ஸ் சொசைட்டியை (GST Professionals Society (Regd.,) உருவாக்னோம். (இப்பொழுது 50 ஆண்டுகள் சேவையை  நிறைவு செய்திருக்கிறார்.)




சொசைட்டியில் தணிக்கையாளர்கள், ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் என எல்லா நிலைகளிலும் உறுப்பினர்களாய் இணைந்தார்கள். துவக்க நிலையில் ஒரு நேரடிக்கூட்டம் மட்டும் சென்னையில் நடத்திவந்தோம்.  அதில் ஜி.எஸ்.டி குறித்த தலைப்பு வாரியாக விளக்க கூட்டங்களை நடத்தினோம்.  உறுப்பினர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன

 

கொரானா காலத்தில், புதிய நிலைமைக்களுக்கேற்ப வாரம் ஒரு கூட்டம் என இணைய வழியில் (Zoom Via) நடத்தினோம்.  சொசைட்டியின் தலைவருக்கு தமிழக அளவிலும். இந்திய அளவிலும் பரந்துப்பட்ட தொடர்புகள் இருந்ததால், ஒவ்வொரு வாரமும் துறை சார்ந்த அறிவும், அனுபவமும் கொண்ட பேச்சாளர்களை ஏற்பாடு செய்தோம். அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.


GSTPS
சொசைட்டியின் பெயரில் ஜிஎஸ்டிக்கென ஒரு வாட்சப் குழுவும், இன்னொன்று GSTPS IT News என்ற பெயரிலும் இரண்டு வாட்சப் குழுக்களை ஆரோக்கியமாய் இயக்கிவருகிறோம்.  அதில் புதிதாய் வரும் ஜி.எஸ்.டி குறித்த அறிவிப்புகள், அப்டேட்டுகள், செய்திகள், வழக்குகள், தீர்ப்புகள் குறித்த விவரம் என தினமும் நிர்வாகிகள் பகிர்ந்து வருகிறோம். உறுப்பினர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து வருகிறோம்.

 

ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியளவில் ஜூம் வழியில் கூட்டங்கள் நடத்துகிறோம். ஒவ்வொரு மாதத்தின் நான்காம் சனிக்கிழமையன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் அரங்கில் நேரடிக் கூட்டம் நடத்துகிறோம். இப்படி கடந்த காலங்களில் 177 ஜூம் கூட்டங்களையும், 51 நேரடிக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறோம்.

 

மேலும் GSTPSக்கென ஒரு தளம் ஒன்றை பராமரித்து வருகிறோம். அதில் கூட்டம் குறித்த அறிவிப்புகள், கூட்டத்தில் பேசும் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிக்களை பகிர்கிறோம்.  சொசைட்டிக்கென இயங்கும் டியூப் சானலில் கூட்டம் குறித்த செய்திகளையும், சில சமயங்களில் காணொளியையும் வெளியிடுகிறோம். பேஸ்புக்கில் தொடர்ந்து ஜி.எஸ்.டி வருமானவரி, பி.எப். .எஸ்., குறித்த செய்திகளையும் வெளியிடுகிறோம்.

 


மேலும் உறுப்பினர்கள் தங்கள் தொழிலில் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி குறித்த கேள்விகள், சந்தேகங்களுக்கு வழிகாட்டலும், நிர்வாகிகளை, (உறுப்பினர்களையும் அணுகலாம். பதிலளிப்பார்கள்.) தொலைபேசி வழியாக தொடர்புகொண்டால் உடனே பதிலளிக்கிறோம். உரியமுறையில் வழிகாட்டுகிறோம்.

 

ஜி.எஸ்.டி துவங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கும் திருத்தங்கள், புதிய புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. வழக்குகள் நடைபெற்றுவருகின்றன. அது குறித்த முக்கிய தீர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

 

இதைத் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்து என்பது மிகச்சிரமம்.  ஆனால் பலரும் இணைந்த கூட்டு செயல்பாடுகளில் இது எளிதில் சாத்தியமாகிறது. ஆகையால் GST Professionals Societyயில் இணைய முன்வாருங்கள்.

 

இந்த சொசைட்டியை முறையாக சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறோம். அதற்கான விதிமுறைகளை, நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம்.  இதை வணிக ரீதியாக பலன் பெறுவது என்பதில்லாமல், சேவை என்ற கண்ணோட்டத்தில் செய்கிறோம்.

 

கடந்த ஆறு ஆண்டுகளாக ஆண்டின் துவக்கத்தில் மாதக் காலண்டர் வெளியிட்டிருக்கிறோம் எங்களது உறுப்பினர்கள் வழியாக ஜி.எஸ்.டி அலுவலங்களுக்கும் விநியோகித்து வருகிறோம். உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் டைரிகள் விநியோகித்திருக்கிறோம்.

 

சொசைட்டியில் சேர பதிவுக்கட்டணம் ஒருமுறை மட்டும் ரூ. 100 எனவும், வருடத்திற்கு சந்தாவாக ரூ. 2400யும்,  தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான செலவுகளை எதிர்கொள்ளத்தான் சந்தா சேகரிக்கிறோம்.

 

சொசைட்டியின் உறுப்பினராக இணையுங்கள். எங்களோடு இணைந்து பயணியுங்கள். வேறு சந்தேகம் இருந்தாலும், எங்களை அழையுங்கள். பதிலளிக்க தயாராக இருக்கிறோம்.

 

நன்றி

 

-    GSTPS

  

திரு. சு. செந்தமிழ்ச்செல்வன்,

தலைவர்

09841226856

 

திரு. பாலாஜி அருணாச்சலம்,

துணைத்தலைவர்

09500041971


திரு. செண்பகம்,

செயலர்

9884564066


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப்https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக்https://www.facebook.com/gstprofessionalssociety