Tuesday, July 7, 2026

முக்கிய தகவல் (Important Notice) – EPFO

 


  • Employees’ Provident Fund Organisation (EPFO) தனது சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒரு பெரிய database consolidation (தரவுத்தள ஒருங்கிணைப்பு) மற்றும் software upgrade (மென்பொருள் மேம்படுத்தல்) மேற்கொண்டுள்ளது.

 

  • இந்த மேம்பாட்டுக்குப் பிறகு, Member services (உறுப்பினர் சேவைகள்) மற்றும் Employer services (நிறுவனர் சேவைகள்) ஆகியவை phased manner (படிப்படியான முறையில்) மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

*Post-Migration நிலை (மாற்றத்திற்குப் பிந்தைய கட்டம்)*

 

  • தற்போது, post-migration stabilization process (மாற்றத்திற்குப் பிந்தைய நிலைத்தன்மை பராமரிப்பு) நடைபெற்று வருகிறது.

 

  • இதன் காரணமாக:
    • Claims (கோரிக்கைகள் – PF withdrawal, pension, etc.)
    • Service requests (சேவை விண்ணப்பங்கள்)

ஆகியவை phased and calibrated manner (கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் படிப்படியான முறையில்) செயல்படுத்தப்படும்.

 

  • ஆரம்ப 2 வாரங்களுக்கு, கூடுதல்:
    • Verification (சரிபார்ப்பு)
    • Validation checks (தகவல் உறுதிப்படுத்தல்)

மேற்கொள்ளப்படும்.

 

*உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுரை*

 

  • இந்த காலகட்டத்தில்:
    • வழக்கத்தை விட சிறிது கூடுதல் கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • அதனால்:  ஒரே விண்ணப்பத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பிப்பதை தவிர்க்க வேண்டும்
    • Peak hours (அதிகப் பயன்பாட்டு நேரங்களில்) portal அணுகுவதை குறைக்க வேண்டும்

 

*EPFO உறுதி*

 

  • EPFO, அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும்:
    • சீரான (smooth)
    • நம்பகமான (reliable)
      சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக செயல்படுகிறது
  • இந்த மாற்றக் காலத்தில், அனைவரின் ஒத்துழைப்பையும் பொறுமையையும் அவர்கள் பாராட்டுகின்றனர்.

 

*இறுதியாக...*

இந்த அறிவிப்பு, EPFO சேவைகள் தற்போது மேம்படுத்தப்பட்டாலும், ஆரம்பகட்டத்தில் சில தாமதங்கள் இருக்கக்கூடும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதனால், தேவையற்ற மீண்டும் மீண்டும் முயற்சிகளை தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுவது நடைமுறைக்கு ஏற்றது.

 

-          தமிழில் : இரா. முனியசாமி

 

 

Important Notice

 

EPFO has successfully completed a major database consolidation and software upgrade to enhance service delivery and improve the member experience.

 

Member and Employer services have been made live in a phased manner and are available for use.

 

As part of the post-migration stabilization process, claims and service requests will be be processed in a phased and calibrated manner with additional verification and validation checks to ensure accuracy during the initial two-week period.

 

Members and Employers are requested to kindly bear with us, as they may experience slightly longer-than-usual processing times for claims and certain services during this period. Members are also requested to avoid repeated attempts to access online services during peak hours or submitting repeated requests.

 

EPFO appreciates the patience and cooperation of all members and remains committed to providing smooth, reliable services to all its stakeholders.

Monday, July 6, 2026

ஏற்காடு: பயணமும், இனிமையான அனுபவங்களும்!



இரண்டு நாள் பயணம் என்பதால் குடும்பத்தோடு வருவதற்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சியான பயணத்தில், ஏன் குடும்பத்தை அழைத்து வரவில்லை என்று இப்போது வருத்தப்படுகிறேன். எனக்கு 400% திருப்தி.”திரு. P.R. சீனிவாசன்.

 

ஏற்காடு பயணம் ஏராளமான மகிழ்ச்சியான நினைவுகளையும், இனிமையான அனுபவங்களையும் தந்தது. பல உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியைப் படங்களாகவும், காணொளிகளாகவும், கருத்துகளாகவும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

 

இதுவரை நாம் பெரும்பாலும் ஒரு நாள் நிகழ்வுகளாக கடற்கரையோர தங்கும் விடுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறோம். கடந்த ஆண்டு ஒரு நாள் தங்கி வந்தோம். இந்த ஆண்டு ஏலகிரியா, ஏற்காடா என்ற விவாதத்திற்குப் பிறகு, இறுதியில் ஏற்காடே தேர்வானது.

 

ஒவ்வொரு குடும்பப் பயணத்திலும், கடைசி நேரத்தில் யாராவது வர முடியாமல் போவது வழக்கம். இந்த முறையும் திருமதி செல்வராணி அவர்களும், அவருடைய இளைய மகள் யாமினியும் வர இயலாமல் போனது வருத்தமாக இருந்தது. கடந்த முறை நம்மோடு பயணித்த தணிக்கையாளர் திரு. மோகன்ராஜ் அவர்களும் வரவில்லை. மற்றபடி அனைவரும் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.

 

பயணம் தொடங்கியது...

 

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இரவு பத்து மணிக்கு சந்தித்து, ஏற்காடு விரைவு ரயிலில் சேலம் நோக்கிப் பயணித்தோம்.

 

அதிகாலையில் சேலம் நம்மை லேசான தூறலுடன் வரவேற்றது. வெளியே வந்தவுடன், நம்மை நனைக்காமல் நின்றுவிட்டது போல இருந்தது. அந்த நேரத்தில் அருந்திய சூடான தேநீர் மிகவும் இதமாக இருந்தது.

 

இரண்டு மினி பேருந்துகளில் ஏற்காடு நோக்கிப் பயணித்தோம். குளிர்காற்றும், இனிய வானிலையும் பயணத்தை மேலும் ரசிக்க வைத்தன. இருபது கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, நமக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த திலகம் நெஸ்ட் தங்கும் விடுதியை அடைந்தோம்.

 

சிறிது ஓய்வுக்குப் பிறகு காலை உணவை முடித்துவிட்டு மீண்டும் பயணம் தொடங்கியது.

 

Peeku பூங்கா

 

பக்கோடா முனைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள Peeku பூங்கா முதல் நிறுத்தம்.

 

பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பறவைகள், விலங்குகள், வண்ண மீன்கள் என ஏராளமான உயிரினங்கள் அங்கிருந்தன. ஆனால், அனைவரையும் மிகவும் கவர்ந்தது பெரிய பறவைக் கூடம்.

 

நம் கைகளில் தானியங்களை வைத்தவுடன், கிளிகளும் பலவண்ணப் பறவைகளும் எந்த தயக்கமும் இல்லாமல் கைகளிலும், தோள்களிலும், தலையிலும் வந்து அமர்ந்தன. அந்த அனுபவத்தை ரசித்தபடியே, மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்.

 

அப்போது சேலத்தைச் சேர்ந்த நமது உறுப்பினர் திரு. சரவணன் அவர்கள், தமது துணைவியாருடன் வந்து நம்மோடு இணைந்துகொண்டார். அனைவருக்காக சுவையான அதிரசமும், முருக்கும் கொண்டு வந்திருந்தது அவருடைய அன்பான வரவேற்பாக அமைந்தது.

 

பக்கோடா முனை

 

அடுத்ததாக பக்கோடா முனையை அடைந்தோம். அங்கிருந்து பார்த்தால், சேலம் நகரமே ஒரு பறவைப் பார்வையில் விரிந்து கிடந்தது.

 

"ஏன் இந்த இடத்திற்கு பக்கோடா முனை என்று பெயர் வந்தது?" என்று யோசித்தபடியே ஒரு சுற்று வந்தோம். இந்தப் பனியில் இதமாக சூடான பக்கோடா விற்றிருப்பார்களோ என்று நினைத்தோம். ஆனால், அதன் உண்மையான காரணம் வேறு.

 

அங்கு நான்கு கல் குவியல்கள் கோபுரம் அல்லது பிரமிடு போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவை அப்பகுதி பழங்குடியின மக்களால் அமைக்கப்பட்டவை என்று பொதுவாக நம்பப்படுகிறது. அந்தக் கல் அமைப்புகளின் தோற்றத்தால்தான் இந்த இடத்திற்கு Pagoda Point அல்லது Pyramid Point என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

 

அங்கிருந்த ஒரு பெரிய கல்லை சிலர் எளிதாகத் தூக்கிக் காட்டினர். சுற்றி நின்றிருந்தவர்களின் உற்சாகக் குரல்கள் அந்த இடத்தை இன்னும் கலகலப்பாக்கின.

 

மதியம் தங்கும் விடுதிக்குத் திரும்பியபோது, திலகம் நெஸ்ட் சுவையான மதிய உணவைத் தயாராக வைத்திருந்தது. நன்றாகச் சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.

 

ஏரியில் ஒரு சுற்று

 

மாலை ஏற்காடு ஏரிக்குச் சென்றோம். எட்டு பேர் வீதம் படகுகளில் ஏறி ஒரு சுற்று வந்தோம். சிலர் பெடல் படகையும் தேர்வு செய்தனர்.

இதமான பனி... அவ்வப்போது லேசான தூறல்... அந்த மாலை நேரமே தனி அழகாக இருந்தது.

 

நெருப்பைச் சுற்றி...

 

இரவு நெருப்பு மூட்டப்பட்டது. இசை ஒலிக்கத் தொடங்கியதும், பலரும் அதைச் சுற்றி ஆட ஆரம்பித்தனர்.

 

பாடல்களை ரசனைக்கேற்றவாறு தொடர்ந்து தேர்ந்தெடுத்து ஒலிக்கச் செய்த செண்பகம் அவர்கள், அம்பத்தூர் பாலாஜி, சிவக்குமார் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

 

பாட்டு போட எத்தனை பேர்! ஆடச் சொன்னால் தான் கொஞ்சம் யோசிக்கிறார்கள்!

ஆனால், ஆரம்பித்த பிறகு யாரும் நிற்கவில்லை.

மூத்தவர்களான முரளி சார், பெருமாள் சார் முதல், இளையவர்களான விக்கி, சாதிக்பாட்சா, குபேந்திரன் வரை அனைவரும் ஆடி அந்த மாலையை உற்சாகமாக மாற்றிவிட்டனர்.

 

விளையாட்டுகளும் சிரிப்புகளும்

 

நடனத்திற்குப் பிறகு பலூன், டம்ளர் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடினர். அதிக மதிப்பெண்கள் பெற்று திரு. பொன்மணி அவர்கள் முதல் பரிசை வென்றார்.

 

அதன்பிறகு பந்து விளையாட்டு. வட்டமாக அமர்ந்திருந்தவர்களிடையே பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற, இறுதியில் நானும், திரு. இளமாறன் அவர்களும் மட்டும் களத்தில் இருந்தோம்.

முதல் பரிசு எனக்கும், இரண்டாம் பரிசு இளமாறன் அவர்களுக்கும் கிடைத்தது.

 

இத்தனை வருடங்கள் விளையாடிய பிறகு, இப்போதுதான் முதல் பரிசு கிடைத்தது!

அதுவும் இந்த ஏற்காடு பயணத்தில் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி.

அருமையான இரவு உணவுடன் முதல் நாள் இனிதே நிறைவுற்றது.

 

பயணம் தரும் புத்துணர்ச்சி

 

பயணம் என்பது வெறும் இடம் மாறுவதல்ல. நம் மனதிலும் உடலிலும் தேங்கியிருக்கும் சுமைகளை அமைதியாக இறக்கிவைக்கும் ஒரு வாய்ப்பு.

 

அதே மனிதர்கள்... அதே வாழ்க்கை... ஆனால் புதிய இடம் நம்மை புதிதாகப் பார்க்கச் செய்கிறது. பழக்கமான சூழலில் சுமைகளாகத் தோன்றியவை, பயணத்தில் மெதுவாக எடையிழக்கின்றன. நாம் மீண்டும் நம்மைக் கண்டடைகிறோம்.

 

பயணம் நல்ல நினைவுகளை மட்டும் உருவாக்குவதில்லை; அந்த நினைவுகள் நீண்ட நாட்களுக்கு நம்மோடு பயணிக்கும். அந்தப் புத்துணர்ச்சிதான் மீண்டும் நம் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது புதிய உற்சாகத்தையும், புதிய வேகத்தையும் தருகிறது.

 

இரண்டாம் நாள் பயணமும் அனுபவங்களும்


ஏற்காட்டிற்கு வந்தாலும், நடைப்பயிற்சியை விடாதவர்கள் சிலர் அதிகாலையிலேயே நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டார்கள்.


தேநீர், காபி எங்கு கிடைக்கும் என்ற சிறிய குழப்பம். காலாற நடந்து அருகிலிருந்த கடைக்குச் சென்று ஒரு தேநீர் அருந்திவிட்டு வந்தேன்.


காலை உணவு வழக்கம்போல அருமையாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பிறகு, காலை வெயில் லேசாக இருந்தாலும், குளிர்ச்சியான வானிலை தொடர்ந்தது. அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அன்றைய பயணத் திட்டத்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


முதலில் சேர்வராயன் மலை முனை. அங்கிருந்து திரும்பும் வழியில் நேரம் இருந்தால் Poppy Hills Adventure Park. பிறகு மதிய உணவு. அதன் பின்னர் ஏற்காட்டிலிருந்து கிளம்பி, சேலத்தில் 1008 லிங்கங்கள் அமைந்துள்ள கோவிலுக்குச் சென்று, இரவு உணவை முடித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்புவது எனத் திட்டமிடப்பட்டது.


சேர்வராயன் மலை முனை


இரண்டு மினி பேருந்துகளில் சுமார் 7 கிலோமீட்டர் பயணம் செய்து சேர்வராயன் மலை முனையை அடைந்தோம்.


அருமையான இடம். அடர்ந்த பனிமூட்டம். அவ்வப்போது பனி விலகி, தொலைவில் விரிந்திருந்த மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் ரசிக்க முடிந்தது.


அங்கு சிலர் துப்பாக்கிச் சுடுதலும், வில் வித்தையும் முயற்சி செய்து மகிழ்ந்தனர். தந்தூரி சிக்கன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தந்தூரி தேநீர் அங்குதான் சுவைத்தோம்!


அந்த மலை அழகில் நேரம் போனதே தெரியவில்லை. கிளம்பும் நேரம் தாமதமானதால், Poppy Hills Adventure Park செல்ல முடியாது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.


பிறகு அண்ணா பூங்காவுக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்போது மதியம் 12.45 ஆகிவிட்டது. ஒரு மணிக்கே பூங்காவை மூடிவிடுவார்கள் என்பதால், சிலர் மட்டும் உள்ளே சென்று ஒரு சுற்று வந்தனர்.


மீண்டும் சேலம்...


தங்கும் விடுதிக்குத் திரும்பியபோது, மதிய உணவு சூடாகவும் சுவையாகவும் தயாராக இருந்தது. அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்டு, பிற்பகல் மூன்று மணியளவில் ஏற்காட்டிலிருந்து புறப்பட்டோம்.


ஒரு மணி நேரத்திற்குள் இருபது கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து மீண்டும் சேலத்தை அடைந்துவிட்டோம்.


ஏற்காட்டின் இதமான குளிரை விட்டு இறங்கியவுடன், சேலத்தின் வெயில் தன் இருப்பை உடனே உணர வைத்தது.


1008 லிங்கங்கள் கோவில்


சேலத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 1008 லிங்கங்கள் கொண்ட கோவிலுக்குச் சென்றோம்.


பலர் அமைதியாக உள்ளே சென்று வழிபட்டனர். மற்றவர்கள் நிதானமாக அமர்ந்து காபி அருந்தியபடி அந்த மாலை நேரத்தை ரசித்தனர்.


வீடு திரும்பும் வழியில்...


முதல் நாள் நம்மோடு இணைந்திருந்த சேலத்தைச் சேர்ந்த உறுப்பினர் திரு. சரவணன் அவர்கள், இரவு உணவிற்காக இரண்டு உணவகங்களைப் பரிந்துரைத்தார். Buffet முறை பற்றி விசாரித்தபோது, குறைந்தது நூறு பேர் இருந்தால்தான் ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.


இறுதியில் சரவண பவனில் திருப்தியாக இரவு உணவை முடித்துவிட்டு, சேலம் ரயில் நிலையத்தை அடைந்தோம்.


ரயில் வர இன்னும் நேரம் இருந்ததால், அனைவரும் அமர்ந்து இரண்டு நாள் பயணத்தின் இனிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தோம்.


ஏற்காடு விரைவு ரயிலில் ஏறிய பிறகும் அந்த உரையாடல் தொடர்ந்தது.


விடியற்காலையில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடைந்து, ஒவ்வொருவரும் இனிய நினைவுகளுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்.

 

பயணத்தை அழகாக்கியவை


காலநிலை

நாம் சென்ற இரண்டு நாட்களும் ஏற்காடு மிக இதமான வானிலையுடன் இருந்தது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளை விட, ஏற்காட்டின் தட்பவெப்பநிலை மிகவும் சமநிலையாக இருந்தது. அந்த இதமான சூழலே பயணத்தை மேலும் ரசிக்க வைத்தது.


பேருந்து சாரதிகள்

இரண்டு நாட்களும் சிரமமில்லாமல் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் திரும்பக் கொண்டு வந்த சாரதிகளுக்கு நன்றி. பயணம் சுகமாக அமைய, அவர்களுடைய பங்களிப்பும் முக்கியமானது.


தங்குமிடம், உணவு


திலகம் நெஸ்ட் மிகச் சரியான தேர்வாக அமைந்தது. தங்குமிடமும், உணவும் இரண்டு நாட்களும் அனைவரின் பாராட்டையும் பெற்றன.


ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் நண்பர், ஏற்காட்டில் நிகழ்ச்சி என்றால் இங்குதான் தங்குவோம்; உணவும் சிறப்பாக இருக்கும் என்று முன்பே கூறியிருந்தார். அந்த அனுபவம் இந்தப் பயணத்திலும் உறுதியானது.


குடும்பத்தோடு வந்தாலும் தேவையான ஏற்பாடுகளை செய்து தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்த அன்பான அணுகுமுறையும் மனதில் நிற்கிறது.


நன்றி


நிர்வாகிகளுக்கு

நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று, மீண்டும் சென்னை திரும்பும் வரை ஒவ்வொரு ஏற்பாட்டையும் கவனிப்பது எளிதான வேலை அல்ல.


உரியவர்களுடன் பேசி, செலவினங்களை கவனமாகத் திட்டமிட்டு, ரயில் முன்பதிவு முதல் தங்குமிடம், போக்குவரத்து, உணவு வரை அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைத்த நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.


உறுப்பினர்களுக்கு


இந்தப் பயணத்தில் 50 வயதைக் கடந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.


பயணம் என்றால், வீட்டில் கிடைக்கும் எல்லா வசதிகளும் கிடைக்காது. இருந்தாலும், அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது.


"இந்த உறுப்பினர்களுடன் காஷ்மீர் வரை கூட பயணம் செய்யலாம்" என்ற நம்பிக்கையை இந்த இரண்டு நாட்கள் ஏற்படுத்தின. அந்த நம்பிக்கையைத் தந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


சிறப்பு நன்றி


பயண ஏற்பாடுகளை மிகுந்த அக்கறையுடன் செய்த திரு. இராமச்சந்திரன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

ஒவ்வொரு முறையும் பேருந்து புறப்படுவதற்கு முன் அனைவரையும் எண்ணிப் பார்த்தவர்... கடைசியாக மட்டும் எண்ண மறந்துவிட்டார்!


கூடுதலாக...


இரண்டாம் நாள் மாலையில், பேருந்தில் காத்திருந்தபோது உறுப்பினர்களிடம் பயண அனுபவங்களைப் பகிருமாறு கேட்டுக்கொண்டோம்.


"குடும்பத்தோடு வர தயங்கினேன். இப்போது அழைத்து வராததற்குத்தான் வருத்தப்படுகிறேன். எனக்கு 400% திருப்தி."
திரு. P.R. சீனிவாசன்

 

"தெரியாத மனிதர்களோடு பயணம் செய்கிறோம் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு நாட்களும் குடும்பத்தினருடன் இருந்தது போன்ற உணர்வையே கொடுத்தது."

திரு. செந்தில்குமாரன் அவர்களின் துணைவியார்

 

"பெரிய நிறுவனத்தில் பணியாற்றியபோது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல சுற்றுலாக்களில் பங்கேற்றிருக்கிறேன். அந்த அளவிலான திருப்தியை இந்தப் பயணமும் தந்தது."

திரு. தீனதயாளன்

 

"ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு நேரம் இருப்போம் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால், அனைவரும் தங்கள் நேரத்தை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்."

திருமதி சாந்தி


Poppy Hills செல்ல முடியாதது இலக்கியாவிற்கும், திரு. செந்தில்குமார் பசங்க அவர்களுக்கும் சிறிய வருத்தமாக இருந்தது. அதே நேரத்தில், இளைய தலைமுறையினருக்கும் இந்தப் பயணம் மிகவும் பிடித்திருந்தது என்பதையும் அது வெளிப்படுத்தியது.

 

இறுதியாக...

 

இதுவரை நாம் சென்றிருந்த பெரும்பாலான பயணங்கள், ஒரு ரிசார்ட்டை மையமாகக் கொண்டவை. அவற்றை ஒருங்கிணைப்பது ஒப்பீட்டளவில் எளிது.

 

ஆனால், ஏற்காடு போன்ற பயணங்கள் வேறுபட்டவை. போக்குவரத்து, தங்குமிடம், நேர மேலாண்மை, உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு என கூடுதல் திட்டமிடலும், கூடுதல் பொறுப்பும் அவசியமாகிறது.

 

அந்தப் பொறுப்பை நிர்வாகிகள் மட்டுமே ஏற்க வேண்டும் என்பதில்லை. ஆர்வமுள்ள உறுப்பினர்களுக்கும் சிறிய பொறுப்புகளை வழங்கினால், அவர்கள் உற்சாகமாக பங்கேற்பார்கள். அது எதிர்காலப் பயணங்களை இன்னும் சிறப்பாக மாற்றும்.

 

ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கும் அனுபவங்களை கவனமாக ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டே சென்றால், எங்கு வேண்டுமானாலும் சிறப்பாகப் பயணம் செய்ய முடியும்.

 

ஒரு வரி ஆலோசகருக்கு பயணங்கள் மிகவும் அவசியமானவை. அவை புத்துணர்ச்சியைத் தருகின்றன. புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. சக வரி ஆலோசகர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கின்றன. உறவுகளை வலுப்படுத்துகின்றன.

 

இந்த முறை வர முடியாத உறுப்பினர்கள், அடுத்த முறை நிச்சயமாக இணைவார்கள் என்ற நம்பிக்கையை இந்தப் பயணம் உருவாக்கியிருக்கிறது.

 

தொடர்ந்து பயணிப்போம். தொடர்ந்து இணைந்திருப்போம்.

நன்றி.

 

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721