இ.எஸ்.ஐ – குடும்ப உறுப்பினர்களைச் சேர்ப்பதில் இத்தனை சிக்கல்களா?
இ.எஸ்.ஐ-க்கும் குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? நிறையவே உண்டு. ஒரு பணியாளர் இ.எஸ்.ஐ-ல் பதிவு செய்யப்படும்போது, அவருக்கு மட்டுமல்லாமல், சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பலன்கள் கிடைக்கின்றன. அதனால் குடும்ப விவரங்களும் முக்கியம்தான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், அந்தக் குடும்ப உறுப்பினர்களை இ.எஸ்.ஐ-ல் சேர்ப்பதற்கான நடைமுறைதான் இப்போது சில இடங்களில் பெரிய தலைவலியாக மாறிக்கொண்டிருக்கிறது. விஷயத்துக்குள் போவோம்.
ஒரு நிறுவனத்தில் ஒருவர் புதிதாக வேலைக்குச் சேர்கிறார். ஆதார் வேண்டும். புகைப்படம் வேண்டும். வங்கிக் கணக்கு விவரம் வேண்டும். இவற்றைப் பெற்று இ.எஸ்.ஐ-ல் அவரைப் பதிவு செய்ய வேண்டும்.
அதோடு கதை முடிந்துவிடுகிறதா? அதுதான் இல்லை. “உங்கள் குடும்ப உறுப்பினர்களுடைய விவரங்களையும் கொடுங்கள்…” அடடா! இங்கேதான் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.
துணைவியார், குழந்தைகள், பெற்றோர். அவர்களுடைய புகைப்படங்கள். ஆதார ஆவணங்கள். எல்லாவற்றையும் வாங்கி, சரிபார்த்து, பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. அதுவும் காலக்கெடு இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்த பத்தாவது நாளுக்குள் பதிவு செய்தால், முதல் தேதி முதல் பதிவு செய்ததாகக் குறிப்பிடும் நடைமுறையும் இருக்கிறது.
கேட்பதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் இதைச் செய்ய வேண்டியது யார்? நிறுவனத்தின் HR! “உங்கள் துணைவியார் புகைப்படம் அனுப்புங்கள்…” “குழந்தைகளுடைய ஆதார் அனுப்புங்கள்…” “இன்னொரு ஆவணம் வேண்டும்…” என்று தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்களிடம் எப்படியோ சமாளித்துவிடலாம். பிற மாநிலங்களிலிருந்து வேலைக்காக வரும் பணியாளர்களிடம்
(Migrant Workers) கேளுங்கள். அவருடைய ஆதார் வாங்கிவிடலாம். புகைப்படம் வாங்கிவிடலாம். வங்கி விவரமும் வாங்கிவிடலாம்.
ஆனால்… குடும்பத்தினரின்
ஆதார், புகைப்படங்கள் வாங்குவது உடனடி சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஊரில்
இருக்கிறது என்பார்கள். ஆவணம் இல்லை என்பதற்கும், குடும்பம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
சரி. அவசரமாக பணியாளரை மட்டும் முதலில் இ.எஸ்.ஐ-ல் பதிவு செய்துவிடலாம். குடும்ப விவரங்களைப் பின்னர் சேர்த்துவிடலாம் என்று நினைத்தால்… அங்கும் ஒரு சிக்கல்.
பின்னர் குடும்பத்தினர்
விவரங்களைச் சேர்க்கச் சென்றால், இ.எஸ்.ஐ தளம் ஆதார ஆவணங்களைக் கேட்கிறது. இரண்டு ஆவணங்கள் வேண்டும் என்று கேட்கும் நிலையும் வருகிறது. “சார், என்னிடம் இதுதான் இருக்கிறது…” “திருமணச் சான்றிதழ் கொடுங்கள்…” அது இல்லை.
வேறு ஆவணம் கொடுத்தால், “பிறப்புச் சான்றிதழ் கொடுங்கள்…” அதுவும் இல்லை. இப்போது பணியாளர் என்ன செய்வார்? அவருக்கு வேலை பார்க்க வேண்டும். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார். கையில் இருக்கும் ஆவணங்களைக் கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில்தானே அரசின் பல்வேறு சேவைகள் வேகமாக டிஜிட்டல்மயமாகி வருகின்றன. அதற்கு முன்பு பிறந்த அனைவரிடமும் பிறப்புச் சான்றிதழ் இருந்ததா? திருமணம் செய்த அனைவரிடமும் திருமணச் சான்றிதழ் இருந்ததா? கிராமங்களில் நடந்த திருமணங்கள் எல்லாம் அரசு பதிவுகளில் இருந்தனவா? இல்லை.
அப்படியிருக்கும்போது இன்று எல்லோரிடமும் ஒரே மாதிரியான ஆவணங்களை எதிர்பார்ப்பது எவ்வளவு நடைமுறைக்கு ஏற்றது? ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடலாம். ஆவணங்கள் கேட்பதை நாம் எதிர்க்கவில்லை.
இ.எஸ்.ஐ-ல் சரியான நபர்தான் குடும்ப
உறுப்பினர் என்பதை உறுதி செய்வது அவசியம்தான். ஆனால்… ஆவணச் சரிபார்ப்பு என்பது உரிமையைப் பெறுவதற்கான தடையாக மாறிவிடக்கூடாது.
இ.எஸ்.ஐ Act, 1948-ன்
Section 2(11)-ல் Family என்பதற்கு சட்ட வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ (General) Regulations-ல்
Regulation 15-A உள்ளிட்ட விதிமுறைகளிலும் Family Details தொடர்பான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியானால் கேள்வி ஒன்றுதான்.
ஒரு குறிப்பிட்ட ஆவணம் இல்லாதபோது, அந்தக் குடும்ப உறவை நிரூபிக்க நம்பகமான மாற்று ஆதாரங்களை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? ஆதார் இருக்கிறது. ரேசன்
கார்டு இருக்கிறது. வாக்காளர்
அட்டை இருக்கிறது. குழந்தையின் பள்ளி ஆவணம் இருக்கிறது. அரசு வழங்கிய வேறு ஆவணம் இருக்கிறது. பதிவு
செய்த பணியாளரின் (Insured
Person declaration) ஒப்புதல் இருக்கிறது. நிறுவன
உரிமையாளரின் சரிபார்ப்பு இருக்கிறது. இவற்றைச் சேர்த்து சரிபார்க்கும் நடைமுறை இருந்தால் என்ன குறைந்துவிடும்?
மாறாக, பணியாளரின் சிரமம் குறையும். நிறுவனத்தின் சிரமம் குறையும். இ.எஸ்.ஐ-ன் பணிச்சுமையும் குறையலாம். நடைமுறை என்பது மக்களைத் தொடர்ந்து ஓட வைப்பதற்காக அல்ல. மக்கள் ஓட வேண்டிய நிலை வராமல் செய்வதற்காக.
அதனால் இ.எஸ்.ஐ நிர்வாகத்திடம் ஒரு வேண்டுகோள். குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தி, நம்பகமான மாற்று அரசு ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆவணம் இல்லாத விசேஷ சூழ்நிலைகளில் பதிவு
செய்த பணியாளரின் (Insured
Person declaration) ஒப்புதல். நிறுவன
உரிமையாளரின் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக பிற
மாநில பணியாளர்களின் (Migrant
Workers) நடைமுறைச் சிரமங்களைத் தனியாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது அரசாங்கத்தின் சலுகை அல்ல. சட்டம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு. இதைக் கருத்தில் கொண்டு நடைமுறைகளை மாற்றியமைப்பதே நல்ல நிர்வாகம்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அருமையான செய்தி!
இ.எஸ்.ஐ-ல் பணியாற்றிய தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பிறகும் மருத்துவ வசதி பெறலாம்! ஒருவர் இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைந்து, பின்னர் பிற
சூழ்நிலைகளில் (Superannuation,
VRS அல்லது Premature Retirement மூலம்) ஓய்வு பெற்றிருந்தால், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஓய்வுக்குப் பிறகும் இ.எஸ்.ஐ மருத்துவ
பலன்களைத் தொடர்ந்து
பெறலாம்.
முக்கிய
நிபந்தனை என்ன? ஓய்வு பெறுவதற்கு முன்பு குறைந்தது 5 ஆண்டுகள் (Insurable Employment-ல் Insured Person) ஆக இருந்திருக்க வேண்டும்.
இந்த
நிபந்தனை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு ஆண்டுக்கு ₹120 மட்டும் செலுத்தி இந்த மருத்துவ வசதியைத் தொடரலாம். இது மாதத்திற்கு ₹120 அல்ல; முழு ஆண்டிற்கான கட்டணம் ₹120 மட்டுமே.
இந்த
மருத்துவ வசதி ஓய்வு பெற்றவருக்கு (Retired Insured Person) மற்றும்
அவருடைய துணை ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது. இ.எஸ்.ஐ-ன் தகவலின்படி, விதிகளுக்கு உட்பட்டு இந்த மருத்துவ பலன்கள் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது.
Primary மற்றும்
Secondary Medical Care, இ.எஸ்.ஐ Dispensary
/ Hospital மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சிகிச்சைகள் விதிகளின்படி கிடைக்கலாம். ஆனால் அனைத்து சிறப்பு சிகிச்சை (Super Speciality Treatment) வசதிகளும்
தானாகவே இதில் அடங்கும் என்று கருதக்கூடாது.
இது புதிய
திட்டம் அல்ல. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான். மேலும், வேலை
செய்யும் பொழுது ஏற்பட்ட (Employment
Injury) காரணமாக நிரந்தர ஊனம் (Permanent Disablement) ஏற்பட்டு,
பணியில் இருந்து( Insurable
Employment-ல்) வெளியேறிய சில பதிவு செய்த பணியாளர்களுக்கும் தனிப்பட்ட விதிகளின்படி இதேபோன்ற மருத்துவ வசதி வழங்கப்படுகிறது.
ஒரு முக்கியமான விஷயம்: முன்பு
இ.எஸ்.ஐ திட்டத்தில் பதிவு செய்தவராக (Insured Person) ஆக இருந்திருக்க வேண்டும்; தேவையான 5 ஆண்டுகள்
(Insurable
Employment) பணி செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பொருந்தும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆகையால்
பணியாளர்கள் இதை கருத்தில் கொண்டு, இந்த வசதியை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
PF பணத்தை பெறுவதில் (Claim) முக்கிய மாற்றங்கள்
புதிய Employees’ Provident Funds Scheme,
2026-ல் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று PF Claim / Withdrawal தொடர்பான விதிமுறைகள் ஆகும். குறிப்பாக, Partial Withdrawal, Final
Settlement, Minimum Balance மற்றும் Claim filing ஆகியவற்றில் மாற்றங்கள் வந்துள்ளன.
1 ஜூலை 2026 முதல் புதிய Employees’
Provident Funds Scheme, 2026 நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் PF தொகையை Claim செய்வது தொடர்பாக சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. PF பணத்தை முழுமையாக எடுத்துவிட முடியாது
வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில் பகுதி
அளவில் எடுக்கும் பொழுது (Partial Withdrawal), பி.எப். கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டாயமாக மீதம் இருக்க வேண்டும்.
இந்த குறைந்தபட்ச
தொகை (Minimum
Balance), பணியாளர் மற்றும் நிறுவனம் செலுத்திய மொத்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் 25%
ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மொத்த PF தொகை – 25% Minimum Balance = தகுதியான Withdrawal தொகை என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.
2. பகுதியாக
எடுக்கும் (Partial
Withdrawal) விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன
மருத்துவச் செலவு, கல்வி, திருமணம், வீடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இருந்த பழைய பல்வேறு விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு, புதிய Scheme-ல் விரிவான வகைப்படுத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது. சில வகையான பணம்
பெறுவதற்கு 12 மாத காலம் வேலை செய்திருக்கவேண்டும் போன்ற தகுதி நிபந்தனைகள் உள்ளன.
3. வேலை இழந்தால் PF தொகையைப் பெறுவதிலும் மாற்றம்
வேலை இழந்த உடனேயே முழு பி.எப் தொகையையும் மொத்தமாக
(Final
Settlement) ஆக எடுத்துக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு பதிலாக, புதிய திட்டத்தில் நீண்ட காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, வேலை முடிவடைந்த பிறகு 12 மாதங்கள் வேலை இல்லாத நிலையில் இருந்த பின்னரே முழுமையாக (Final Settlement) பெறுவதற்கான தகுதி ஏற்படும்.
4. பணம் பெறுவதற்கு இணைய வழியில் (Claim Online) தாக்கல் செய்யலாம்
பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் போது, பி.எப்.
உறுப்பினர் தளத்தில் தாக்கல் செய்யலாம். தொழில்நுட்ப காரணங்களால் இணைய
வழியில் சமர்ப்பிக்க முடியாத நிலையில், சில சூழ்நிலைகளில் நேரடியாக
விண்ணப்பத்தை (Physical Claim) நிறுவனத்தின்
(Employer)
மூலம் சமர்ப்பிக்கவும் திட்டம் அனுமதிக்கிறது.
5. பணியாளர் கவனிக்க வேண்டியது
PF Claim செய்வதற்கு முன்பு, Aadhaar →
UAN → Bank Account → KYC → Nomination ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.
இறுதியாக... புதிய பி.எப் விதிகளின் நோக்கம், தேவையான நேரத்தில் பணியாளர்களுக்கு பி.எப் தொகையைப் பெறும் வசதியை எளிமைப்படுத்துவதுடன், ஓய்வுக்கால சேமிப்பில் ஒரு பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்.
இன்னும் வளரும்.
- - இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி, இபி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர், எல்.ஐ.சி. முகவர்
95512
91721
(இந்தக் கட்டுரை “தொழில் உலகம்” செப்டம்பர் மாத இதழில் வெளிவந்தது.)

